நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் கட்சியின் அரசியல் அதிகார சபையின் உறுப்பினராகவும், தேசிய பிரதி அமைப்பாளர் பதவியையும் வழங்கி கௌரவித்துள்ளமைக்காக கட்சியின் நிந்தவூர் மத்திய குழு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
கட்சியின் அரசியல் அதிகார சபையின் உறுப்பினராகவும், தேசிய பிரதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள கடிதம் இன்று 04.01.2021ஆம் திகதியிடப்பட்டு கிடைக்கப் பெற்றதாக தவிசாளர் தாஹீர் மத்திய குழு உறுப்பினர்களிடம் இன்று இரவு தெரிவித்தார்.
குறிப்பிட்ட கடித்தத்தின் பிரகாரம் கடந்த 2020 டிசம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் அரசியல் அதிகார சபையிலேயே மேற்படி நியமனத்தை வழங்குவதற்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் தாஹீருக்கு வழங்கப்பட்டுள்ள பதவி குறித்து மத்திய குழு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கட்சி வழிப் பதவிகளைப் பெற்றவர்கள் கட்சியை வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அப்பதவிகளின் மூலமாக தனிப்பட்ட இலாபங்களை அடைந்து கொண்டதோடு, கட்சிக்கும், தலைவருக்கும் துரோகம் செய்துள்ளார்கள்.
ஆதலால், கட்சியின் அரசியல் அதிகார சபையின் உறுப்பினராகவும், பிரதி தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் கட்சிக்கும், தலைவருக்கும் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். பிரதேசவாதம் போன்றவற்றை வளர்க்காமலும் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். உங்களைப் பொறுத்தவரை அத்தகைய துரோகச் செயலை செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது என்றும் தவிசாளர் தாஹீருடன் கருத்துக்களை தெரிவிக்கும் போது கூறினார்கள்.
மத்திய குழு உறுப்பினர்களிடம் கருத்துரைத்த தவிசாளர் தாஹீர், கட்சியை பொறுத்த வரை பதவிகள் இருந்தால்தான் கட்சியை வளர்க்கும் பணிகளை நாம் செய்வோம் என்பதல்ல. கட்சியில் எந்தப் பதவியும் இல்லாது கட்சியை அம்பாரை மாவட்டத்தில் வளர்த்துள்ளோம். நமது உழைப்பினால்தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அம்பாரை மாவட்டத்தில் முதற் தடவையாக பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனை கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.
இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் எனக்கு இந்நியமனத்தை வழங்கியமைக்கு கட்சியின் தலைவருக்கும், அரசியல் அதிகார பீடத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நியமனத்தின் மூலமாக என்னை தலைவர் கௌரவித்தாலும், அது நிந்தவூர் மக்களுக்கும், அம்பாரை மாவட்டத்திலுள்ள கட்சியின் ஆதரவாளர்களுக்கும் வழங்கிய கௌரவமாகவே பார்க்கின்றேன்.
என்னை அரசியல் ரீதியாக வழி நடத்திக் கொண்டிருக்கின்ற மத்திய குழு உறுப்பினர்களாகிய நீங்கள் இன்றும் எனக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே வேளை, கட்சிக்கும், தலைவருக்கும் விசுவாசமாக நடந்து கொள்வதோடு, சமூகத்தின் உரிமைசார் விவகாரங்களிலும் தலைவருக்கு பூரண ஒத்தழைப்பு வழங்குவேன். எனது அந்த கடமையில் நான் சரியாக நடக்கின்றேனா என்று நீங்கள் அவதானிப்பதோடு, சரியான வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்

0 comments:
Post a Comment