முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தற்போது பதவி வகித்து வருவது சட்டவிரோதமானது என அந்த கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் 122 வது பிறந்த தின நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலில் அவரது சிலைக்கு அருகில் இன்று காலை இரண்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. காலை 7.15 அளவில் சந்திரிகா தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் சிலரும் கலந்துக்கொண்டனர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுங்கு செய்துள்ள நிகழ்வில் கலந்துக்கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment