ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது,
பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் தங்களது சுய விளக்கங்களை அளித்தார்கள். தங்களது பிரதேசங்களிலும் அதேநேரம் தங்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் சில விடயங்களை அரசங்கத்தினூடாகச் செய்து கொள்வதற்கான தேவைப்பாடு இருக்கின்ற விவகாரங்களைச் சாதித்துக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர். அதேநேரம், கடந்த காலங்களிலும் மாறி மாறி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்திருந்த போதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசாங்கங்கள் தவறு விட்டிருக்கின்றன அந்த வகையில் தாங்கள் செய்தது தவறல்ல என்ற தோரணையிலும் பதிலளித்திருந்தார்கள்.
இருந்த போதிலும் குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய மன உணர்வுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில், இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு முடிவுகாணாமல் இருக்கின்ற விவகாரத்திலும் தாங்கள் அந்தக் கோரிக்கையை முன்னிருத்தித்தான் இந்த 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்ததாகவும், இருந்தும் தாங்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்து தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் உறுதிபடக் கூறினர்.
அந்த அடிப்படையில் அதை அவர்கள் பகிரங்கமாக செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றும், தொடர்ந்தும் அவர்கள் அவ்வாறான சுய விளக்கத்தை மக்களிடத்தில் தாங்கள் விட்ட இந்த தவறுக்கான அந்த மன்னிப்பை கோருகின்ற சந்தர்ப்பத்தில், தொடர்ந்தும் கட்சியின் உறுப்பினர்களாக பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் ஒரே குழுவாக இருந்து இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதற்கான அந்த உறுதியையும் அவர்களிடத்திலிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கேள்வி: எதிர்காலத்தில் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எப்படியிருக்கும்,
பதில்: அவர்கள் எவ்வாறு எதிர்காத்தில் கட்சியோடு சேர்ந்து பயணிக்கப் போகின்றார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் அந்த நடவடிக்கைகள் இனி தீர்மானிக்கப்படும்.
கேள்வி: திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இராஜினாமா கடிதம் கையளித்ததாக அறியக்கிடைத்திருக்கின்றது அது சம்பந்தமாக உங்களது பதில்?
பதில்: இது சம்பந்தமாக தனது சுய விளக்கத்தை கொடுக்கின்ற போது கட்சிக்கு, தலைமைக்கு இது அபகீர்த்தியான விடயமாக வந்திருக்கின்றது என்பதை முன்னிட்டு தன்னுடைய உயர்பீடப் பதவியிலிருந்து சுயமாக விலகிக் கொள்கின்றேன் என்ற கடிதத்தை ஏற்கனவே என்னிடத்தில் தந்திருந்தார்.
கேள்வி: அந்த இராஜினாமா கடிதத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா?
பதில்: இந்த கூட்டத்தின் பிற்பாடு அது குறித்த தீர்மானத்தை நாங்கள் எடுக்கவில்லை. எல்லா உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து தலைமையோடு பயணிப்பது அவசியம் என்ற வலியுறுத்தலை உச்சபீட உறுப்பினர்கள் எல்லோரும் மிகத் தெளிவாக செய்திருக்கின்றார்கள். அதை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment