| வெலிவெறியப் பகுதில் இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட
பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்
குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார்.
இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது
என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்தப் பகுதியில் செயற்படும் ஒரு தனியார்
நிறுவனத்திலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர்
பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பசில் ராஜபக்ஷ, அப்பகுதியில் உள்ள முக்கிய பௌத்த பிக்குகள் மற்றும் அந்த
நிறுவனத்தின் உரிமையாளர்கள், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியோருடன் பொதுமக்கள்
பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
ரப்பர் பொருட்களும், கையுறைகளும் தயாரிக்கும் ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு
பாதுகாப்பான குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான
செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரினர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
இதையடுத்து அப்பகுதியில் மக்கள் மீண்டும்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு புத்த
பிக்குவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வலுப்பெற்ற நிலையில், வியாழக்கிழமை
ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்ட போதே,
பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு ஒரு பதட்டமான
சூழல் நிலவுவதாக கூறும் உள்ளூர் செய்தியாளர்கள், போராட்டம் நடைபெறும்
பகுதிகளுக்கு போக தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும்
பிபிசியிடம் தெரிவித்தனர்.
B.B.C
B.B.C
0 comments:
Post a Comment