• Latest News

    November 16, 2013

    இது ஜனநாயக நாடு- டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

    எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் சர்வததேச விசாணைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும்  பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து. இது ஜனநாயக நாடு என்பதால்  எவருக்கும் எந்தக் கருத்தைத் தெரிவிக்கவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 
    பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர் கூடத்தில் இன்று(16)  மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்-

    காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. விசாரணைகள் மேற்கொள்ள திறமை மிக்க பக்க சார்பற்ற அதிகாரிகள் எமது நாட்டில் உள்ளனர். இந்த ஆணைக்குழுவுக்கு எவரும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

    ஆனால், காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பவர்களில் சிலர் இந்த நாட்டில் இல்லை. இன்னும் சிலருக்கு இலங்கையில் பிரஜா உரிமை கூட  இல்லை.

    ஒரு பக்க நியாயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள். மறுபக்க நியாயத்தையும் எமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

    கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
    மனிதக் கேடயங்களாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களை எமது படையினர் மீட்டனர். அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவுகள் வழங்கிப் பாதுகாத்ததோம். இன்று அவர்களை  சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்துள்ளோம்.
    வடக்கின் அபிவிருத்தி வேகம் 22 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு அபிவிருத்திக்காக செலவிடப்படுகின்றது.
    30 வருட கால பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் துடைத்தெறிந்தோம். இது ஒரு குற்றச் செயலா? நாட்டில் புலிகள் அராஜகம் புரிந்த காலத்தில் எந்த ஊடகமும் தமிழ் மக்களின் நலன்களைப் பற்றி வாய்திறக்காதிருந்ததேன்?


    பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருனுடன் நான் சினேகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் வடபகுதிக்குச் சென்றதை பெரிதும் வரவேற்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

    போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை தானே ஒரு சுயாதீன விசாரணையை நடத்தும் என்பது குறித்து அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது ஆட்சியின் மீது சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து எச்சரிக்கையும் செய்துள்ளார்.

    ''கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு எவரும் கல் எறியக் கூடாது'' என்று அவர் கூறினார். போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க தான் ஏற்கனவே ஒரு ஆணைக்குழுவை அமைத்துவிட்டதாகவும், அது சுயாதீனமானது என்றும் அவர் கூறினார்.

    ஏற்கனவே காணாமல் போனவர்கள் குறித்து ஒரு விசாரணைக்குழுவை தான் அமைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    ''30 வருட போரில் நடந்தவற்றை விசாரிப்பதற்கு எங்களுக்கு நிறையக் காலம் பிடிக்கும். குற்றஞ்சாட்டப்படும் எவருக்கு எதிராகவும் நாம் விசாரிப்போம். முன்பும் அதனைக் கூறியிருக்கிறோம். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இல்லாவிட்டால், எங்களை விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் இங்கு வர விசா கொடுத்திருப்போமா? நாடெங்கும் அவர்கள் சென்று எதிர்க்கட்சிக் குழுக்களை சந்திக்க அனுமதித்திருப்போமா?'' என்றார் மஹிந்த ராஜபக்ஷ.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இது ஜனநாயக நாடு- டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top