கல்முனையை இனரீதியாக பிரித்து தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி பிரதேச செயலகங்கள் வழங்கப்படுமாயின் அது கிழக்கு மாகாண சபையை முஸ்லிம்களுக்கும் தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.
கல்முனைக்கான இரண்டு இன ரீதியான பிரதேச செயலகங்கள் பற்றிய கட்சியின் நிலைப்பாடு பற்றி கேட்ட போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனை என்பது தமி;ழ் பேசும் மக்களைக்கொண்ட பிரதேசமாகும். இதன் பிரதேச செயலாளராக தமிழ் பேசும் ஒருவரே இருக்கின்றார். இந்த நிலையில் இனரீதியில் கல்முனையை பிரிக்க வேண்டும் என்பது பல பாரிய முன்னுதாரணங்களுக்கு உதாரணமாகும் என எச்சரிக்கின்றோம்.
அத்துடன் கல்முனை பிரதேசத்துள் முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இரண்டற கலந்து வாழ்கின்ற சூழ் நிலையில் தனியாக எல்லையிடுவது என்பது முடியாத காரியமாகும். ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனிக்கவென தனியான தமிழ் உப பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வசதி கூட கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே கல்முனையை இனரீதியில் பிரிப்பதை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வெகுவாக வலியுறுத்தும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:
Post a Comment