சுலைமான் றாபி;
நிந்தவூரில் காணப்படும் சகல விளையாட்டுக்களையும் அதனோடு
இணைந்த வீரர்களையும் ஊக்குவித்து அதன்மூலம் நிந்தவூர் பொது விளையாட்டு
மைதானத்தை நவீனமயப்படுத்தி விளையாட்டு வீரர்களையும், இளைஞர்களையும்
ஊக்குவிப்பேன் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்
தெரிவித்தார். நேற்று முன்தினம் இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம். ஹாரூன்
தலைமையில் இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச இளைஞர்
கழக சம்மேளன கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இளைஞர்கள்
மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிந்தவூரில்
அண்மைக்காலமாக பல வீரர்கள் மாகாண, மற்றும் தேசிய மட்டங்களில் விளையாடி
இவ்வூருக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்கள். அந்த வகையில் அவர்களின்
விளையாட்டு திறமைகளை மேலும் ஊக்குவிக்க தற்போது பெரும் குறையாகக்
காணப்படும் பொது விளையாட்டு மைதானம் நவீன மயப்படுத்தப்படும். மேலும் இந்த
மைதானம் ஆரம்பத்தில் கரடு முரடாக காணப்பட்ட போது தனது நிர்வாக
செயற்பாட்டின் கீழ் வீரர்கள் ஓரளவிற்கு விளையாடுவதற்கான வழிவகைகளை செய்து
கொடுத்திருக்கிறேன். அந்த வகையில் கடின பந்து போட்டிகளும், மென்பந்து
போட்டிகளும் இன்னும் உதைபந்து போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
மேலும் இந்த மைதானத்தில் அண்மைக்காலங்களில் இரவு நேரப்
போட்டிகளும் மிகச்சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கால
கட்டங்களில் தற்போது அதிகளவான கடின பந்து அணிகள் உருவாகியிருக்கிறது.
இவ்வாறு அணிகள் உருவாகின்ற போது அந்த அணிகள் தங்கள் பயிற்சிகளை
பெற்றுக்கொள்ள ஒரு சிறந்த மைதான பயிற்சி களம் அவசியமாகும். பல்வேறு வகையான விளையாட்டுக்களையும் நமது விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது, அவைகளுக்குண்டான
பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். அந்த வகையில் கிரிக்கெட்,
உதைபந்து, கபடி, எல்லே, கரப்பந்து மற்றும் மெய்வல்லுனர் போன்ற
விளையாட்டுக்களை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளை நிந்தவூர் பிரதேச சபை
கையாண்டுள்ளது.
அந்த வகையில் மைதானத்தில் கிழக்குப் புறமாக காணப்பட்ட
ஒரு பகுதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றது. இந்த
மைதானத்தில் ஒரே நேரத்தில் உதைபந்து மற்றும் கிரிக்கெட் போன்ற
விளையாட்டுக்களையும் இன்னும் இதர விளையாட்டுக்களையும் , விளையாட
சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் இங்கு கடின பந்து பயிற்சி
களமும், பார்வையாளர் மண்டபமும், வீரர்களுக்கான ஒய்வறைகளும் இன்னும் மல,
சல கூட வசதிகளும் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த அபிவிருத்தி வேலைகளை செய்து முடிப்பதற்கு ரூபா 1.5கோடி செலவு செய்யப்பட இருக்கின்றது.
மேலும் விளையாட்டுக்களின் போதும், வெளி நடவடிக்கைகளின்
போதும் இளைஞர்கள் ஒழுக்க விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட
வேண்டும். தான் சிறந்த குழுவின் வழி நடத்தல்களுடனே சகல அரசியல்
மற்றும் சமூக வேலைப்பாடுகளை நிர்வகித்துக் கொள்ள முடிந்துள்ளதென்றும்
பிரதேச சபைத்தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி
ஆர்.யு.அப்துல் ஜலீல், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யு.எல்.ஏ. மஜீட்
மற்றும் சகல இளைஞர் கழகங்களில் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.


0 comments:
Post a Comment