• Latest News

    March 13, 2014

    ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி புரியாணியை சாப்பிட நீட்டுவது போன்றதுதான் அமைச்சர் பதவிகளும், அபிவிருத்திகளும்: முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

    எஸ்.அஷ்ரப்கான்:
    நாம் இந்த அரசையும், அரசுக்கு ஆதரவான முஸ்லிம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண, மாநகர சபை உறுப்பினர்களையும் மிக கடுமையாக விமர்சிப்பதாக பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். ஆனால் நாம் ஒன்றும் எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு விமர்சனம் செய்யவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
    அவர் மேலும் தெரிவித்ததாவது,

     நாம் இந்த ஜனாதிபதியை அவரது பதவியில் அமர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அதற்காக எமது லட்சக்கணக்கான சொந்தப்பணத்தை அவருக்காக செலவு செய்துள்ளோம். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பேச ஒரு மௌலவியேனும் முன் வராத போது நாம் பாரிய அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது அவரது வெற்றிக்காக பாடுபட்டோம். அதே போல் கிழக்கு மாகாண சபை தேர்தல் உட்பட சகல மாகாண சபை தேர்தல்களிலும் அரசின் வெற்றிக்காக பாடுபட்டோம்.

    அரசும் நாம் எதிர்பார்த்தது போல் நன்றாகவே இருந்தது. ஆனால் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்காமை பாரிய விபரீதங்களை எதிர் காலத்தில் ஏற்படுத்தும் என நாம் அரசுக்கு ஆலோசனை கூறினோம். ஆனால் அது கருத்தில் எடுபடவில்லை. இதன் காரணமாக நாம் அரசாங்க ஆதரவிலிருந்து விலகினோம்.

    அதனை தொடர்ந்து பல அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு நடந்தேறியதை நாம் கண்டோம். அவ்வேளை நாமும் அரசுடன் இருந்திருந்தால் இன்று நாம் அரசையும் அமைச்சர்களையும் கண்டிப்பதாக கூறுபவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான இத்தனை அநியாயங்களுக்கும் நாமும் பொறுப்பு என கூறியிருப்பர். ஆனாலும் சரியான நேரத்தில் சரியான முடிவை நாம் எடுத்ததால் முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைமைத்துவத்தை இத்தகைய அநீதிகளுக்கு துணை போனது என்ற பழிச்சொல்லிலிருந்து இறைவன் காப்பாற்றினான். அத்தகைய தூர நோக்க சிந்தனையை இறைவன் எமக்குத்தந்தான்.

    இன்று முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ், ரிசாத் காங்கிரசெல்லாம் அரசுக்கு முண்டியடித்துக்கொண்டு முட்டுக்கொடுக்கின்றன. இவர்களால் இந்த சமுதாயம் என்ன உரிமைகளை பெற்றுள்ளது என்ற கேள்வியின் காரணமாகத்தான் நாம் இவர்களை விமர்சிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் இது வரை காலமும் முஸ்லிம்கள் அனுபவித்து வந்த பல விடயங்கள் இல்லாமல் போவதற்கு இவர்களும் அரசாங்கத்தின் பங்காளி என்பதனாலேயே நாம் இவர்களை குற்றம் சாட்ட வேண்டியுள்ளது.

    இந்த அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று தருவார்களாயின் அவர்களை பாராட்டுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் உரிமைகள் பற்றி கவலைப்படாது கொந்தராத்துகளின் மூலம் தமது வயிற்றுப்பிழைப்பையே முக்கியமாக கருதி இவர்கள் அனைவரும் செயற்படுகிறார்கள். ஒரு பெண்ணை பகிரங்கமாக நிர்வாணப்படுத்தி அவளை அவமானப்படுத்திக்கொண்டு அவளுக்கு புரியாணியை சாப்பிட நீட்டுவது போன்று இந்த அமைச்சர்களும் அவர்களின் கட்சிக்காரர்களும் அபிவிருத்தி பற்றி செயற்படுவதை சமயம் கற்ற மௌலவிமார் என்;ற வகையில் கூட நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

    ஆகவேதான் கூறுகின்றோம் முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி நடத்தும் அரசாங்கம் பேரினவாதிகளால் தாக்கப்பட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்பந்தமாக ஆராயும் கமிசன் ஒன்றை நிறுவி அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும். தரை மட்டமாக்கப்பட்ட அநுராதபுரம் பள்ளிவாயல் போன்றவை மீண்டும் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். அதே போல் சஊதி அரசால் சுனாமி பாதிப்புக்கள்ளான ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் கைளிக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் தனியான அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மௌலவி ஆசிரியர் நியமனம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்இ கொழும்புஇ குச்சவெளிஇ ஒலுவில் போன்ற முஸ்லிம்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட காணிகள் அனைத்தும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் அல்லது உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். ஹலால் அனுமதி பத்திரம் வழங்கும் உரிமையை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இவற்றை பெற்றெடுக்க முஸ்லிம் காங்கிரசும் ஏனைய காங்கிரஸ்களும்; முயற்சி செய்யாமல் வெறுமனே வார்த்தை ஜாலங்களால் இந்த சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருந்தால் அவர்களை நாம் விமர்சிக்காமல் இருப்பது இந்த சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி புரியாணியை சாப்பிட நீட்டுவது போன்றதுதான் அமைச்சர் பதவிகளும், அபிவிருத்திகளும்: முபாறக் அப்துல் மஜீத் மௌலவி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top