• Latest News

    March 09, 2014

    ஜனாதிபதி தோற்கடிக்கப்பட முடியாத சக்தி: எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி

    இப்னு செய்யத் ;
    தோற்கடிக்கப்பட முடியாத சக்தியாக உள்ள ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்கள் மூலமாக தோற்கடிக்க முடியுமென்று எண்ணிக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள். அமெரிக்காவினால் ஐ.நாவின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரவுள்ள பிரேரணை உப்புச்சப்பற்றதாக மாறியிருக்கின்றது. ஆதலால், எம்மிடையே உள்ள பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள முயற்சிகளை எடுத்தல் வேண்டும்.

    இவ்வாறு, திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பொத்துவில் சுற்றுலா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் அறும்பை பசுபிக் ஹோட்டலின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தனி விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
    ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கை மீது குற்றப் பிரேரணையை கொண்டு வருவதன் உண்மையான நோக்கம் இங்கு வாழும் தமிழ் மக்களின் நன்மைகளை கருத்திற் கொண்டல்ல என்பதனை தமிழ் சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா இலங்கையில் தனது சொந்த நலன்களை அடைந்து கொள்வதற்காகவே தமிழர்களின் பிரச்சினைகளை கைகளில் எடுத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    தமிழ்த் தலைவர்கள் அமெரிக்கா தங்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுத் தருமென்றே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அமெரிக்காவின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இப்போது, அமெரிக்கா தங்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக தமிழ் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவை நம்பிக் கொண்டிருந்த தாங்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளோம் என்று தமிழ்த் தலைவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.
    எம்மிடையே உள்ள பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள முயற்சிகளை எடுத்தல் வேண்டும். சர்வதேச நாடுகள் எங்களின் பிரச்சினைகளை பயன்படுத்தி அவர்கள் இலாபம் அடைந்து கொள்ளவே எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து செயற்பட வேண்டும்.

    சிரியாவில் குழந்தைகளை கொன்று குவிப்பதற்கு பக்க துணையாக இருந்து கொண்டிருக்கும் அமெரிக்கா இலங்கையை தண்டிக்க எண்ணுகின்றது. அமெரிக்காவுக்கு இலங்கையை தண்டிப்பதற்கு எந்த அருகதையும் கிடையாது. இலங்கையை பயம் காட்டி தனது காலை இலங்கையில் ஊன்றுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இருந்து சீனாவை துரத்த வேண்டும். இதுதான் அமெரிக்காவின் ஒரே நோக்கமாகும்.
    இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ வர இருக்கின்றது. இத்தேர்தல்களில் ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது. இன்று நாட்டில் எதிர்க் கட்சிகள் யாவும் பலவீனம் அடைந்துள்ளன. நாட்டில் பல ஜனாதிபதியும், பலமான அரசாங்கமும் இருந்து கொண்டிருக்கின்றன. பலமற்ற எதிர்கட்சிகளினால் ஒரு போதும் ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது. அவர் தோற்கடிக்கப்பட முடியாத சக்தியான இருக்கின்றார். ஆதலால், அடுத்த ஆட்சியும் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலேயே அமைய இருக்கின்றது.

    இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்படுகின்றது. ஜனாதிபதி பெண்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதில் அதிக அக்கரையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். பெண்களின் கல்வி, பொருளாதார அபிவிருத்திகளுக்கு மட்டுமன்றி பெண்களின் பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்திலும், ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சபைகளிலும் இடம்பெற வேண்டுமென்று நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இத்தகைய சிந்தனைகளையுடைய ஜனாதிபதியின் தலைமையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் எல்லோரும் இணைந்து செயற்பட முன் வருதல் வேண்டும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தோற்கடிக்கப்பட முடியாத சக்தி: எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top