ஆளும் கூட்டணியின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட கெசினோ சூதாட்டம் தொடர்பிலான செயல் நுணுக்க கருத்திட்ட அபிவிருத்தி தொடர்பான வர்த்தமானி கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தே மோதல்கள் ஆரம்பமாயின.
அந்த மோதல் இன்று உக்கிரமடைந்துள்ளமை சில அமைச்சர்களின் கருத்துகளினூடாக வெளிப்படையாக தெரிய வருகிறது.
தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசுடன் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகின்றோம் என்பதை விரைவில் தீர்மானிப்போம் எனவும் அத்தீர்மானத்தை கெசினோக்காரர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றால் நீண்ட காலத்திற்கு அரசுடன் எம்மால் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நிர்மாண, பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச; நாட்டின், நாட்டு மக்களின் தலைவிதியை பாதிக்கும் வகையிலான பிரச்சினை இந்த அரசாங்கத்துக்கு கீழ் நடந்தால் தான் அரசாங்கத்தில் இருந்து வெளியேற இரண்டு முறை சிந்திக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜே.வி.பி.யிலிருந்து திருடியதால் தான் வெளியேறவில்லை. சுனாமி நிதிச்சபை காரணமாகவே இந்த அரசாங்கத்துக்குள் வந்தேன்.
இந்த நாட்டினது ஆட்சியை இரண்டு, மூன்று பேரது கைகளுக்குள் வழங்க முடியாது. இருந்தும், இரண்டு மூன்று பேர் தமது பலத்துடன் ஆட்சியை பெற முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் புதிய தலைவர் ஒருவரே ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசும் கூட்டணியின் மேதினக் கூட்டங்களுக்கு விமல் விரன்ச அழைக்கப்பட்டபோதும் அதணை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இதன் மூலமும் அரசுக்கும் அவருக்கு இடையிலான முரண்பாடுகள் நிறைவடைந்துள்ளமை வெளிப்படுகின்றது.
இவ்விரு அமைச்சர்களும் கெசினோவை இலங்கைக்குள் கொண்டு வரக்கூடாது என்பதற்காக கட்சி தாவுவதற்கு தயார் என்ற மனநிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.
அதேநேரம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
சிரேஷ்ட அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரன மற்றும் டி.யூ.குணசேகர போன்றோர் நமது கருத்துகளை அரசின் காதுகளுக்கு அனுப்பி விட்டனர்.
இப்படி அரசுக்குள் உக்கிரமோதல் உருவாகி உள்ள இவ்வேளையில் கெசினோ சட்டத்துக்கு வாக்களிக்காதவர்கள், வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசின் மற்றொரு தரப்பு வற்புறுத்துவதால் அரசாங்கம் தடுமாறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment