• Latest News

    July 08, 2014

    எமக்கு வீடும் வேண்டாம் வளவும் வேண்டாம் எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள்! - ஆணைக்குழு முன் தாய் வேண்டுகோள்!

    எங்களுடைய பிள்ளைகள் எங்கே? எங்களுக்கு வீடும் வேண்டாம்..! வளவும் வேண்டாம்..! எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள். எங்கள் பிள்ளைகளால் நாங்கள் மனநோயாளிகளாகி மருந்துப் பொட்டலங்களுடன் அலைகிறோம். உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே  மக்கள் இக்கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    என காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோபாவேசத்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
    மேற்படி ஆணைக்குழுவின் முல்லை மாவட்டத்திற்கான விசாரணைகள் இன்றுடன் நிறை வடைந்திருக்கும் நிலையிலேயே மக்கள் இக்கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    மேற்படி ஆணைக்குழு விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக சாட்சியமளிக்கும் உறவினர்களிடம் உங்களுக்கு வீடு இருக்கின்றதா? அரசாங்கம் உதவிகள் தருக்கின்றதா? என தொடர்ச்சியாக 4 அமர்வுகளிலும் ஆணைக்குழு கேட்டிருந்தது.

    இந்நிலையில் இன்றைய தினம் மக்கள் பலர் ஆத்திரமடைந்து, எமக்கு வீடும் வேண்டாம், வளவும் வேண்டாம். காணாமல் போன எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என கோரிக்கை விடுத்திருப்பதுடன், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் உங்கள் பகுதிக்குள் காணாமல் போனவர்களுக்கும் நீங்கள் பதில் சொல்ல ஏன் இத்தனை காலம் உங்களுக்கு தேவைப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மருத்துவமனை மீது தாக்குதல்.

    போர் நடைபெற்ற பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும், பாடசாலைகள், பொது இடங்கள், பொதுமக்கள் மீதும் இலங்கை அரசாங்கம் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை பல தரப்புக்களும் முன்வைத்திருந்த நிலையில் அரசாங்கம் அதனை தொ டர்ந்தும் நிராகரித்தே வந்தது.

    இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பாபு காளியம்மா என்ற தாய் தன்னுடைய 70 வயதான கணவர் காணாமல் போனமை தொடர்பில் வழங்கிய சாட்சியத்தின் போது,

    2009.04.26ம் திகதி நாங்கள் இருந்த கூடாரத்தின் பின்புறமாக படையினர் ஏவிய ஷெல் வீழ்ந்து வெடித்தது. இதில் என் கணவர் காயமடைந்தார். அதே இடத்தில் என்னுடைய 5 பிள்ளைகள் கொல்லப்ப பட்டார்கள். என கண்ணீர் மல்க சாட்சியம் வழங்கிய அவர் தொடர்ந்து குறிப்பிடும் போது,

    காயமடைந்த என் கணவரை மாத்தளன் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தேன். பின்னர் 27ம் திகதி வைத்தியசாலைக்குச் சென்றிருந்த சமயம், வைத்தியசாலை மீது ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததில் வைத்தியசாலை கட்டிடம் முழுமையாக இடிந்து கிடந்தது.

    அங்கே முதல்நாள் இருந்த நோயாளர்கள் உடல் சிதறி கிடந்தார்கள். இரத்த வெள்ளம் ஓடியது. அங்கே என் கணவரை இறந்தவர்களுக்குள்ளும் தேடினேன் கிடைக்கவில்லை. என கண்ணீர் மல்க சாட்சியம் வழங்கினார்.

    இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் அந்த வைத்தியசாலை விடுதலைப் புலிகளுடையதா? அங்கே புலிகள் இருந்தார்களா? என கேட்டனர்.

    ஆனால் அது புலிகளுடைய வைத்தியசாலை அல்ல. அங்கே புலிகள் நிற்கவுமில்லை. என அந்த தாய்  சாட்சியமளித்துள்ளார்.

    இதேவேளை இன்றுடன் முடிந்துள்ள ஆணைக்குழுவின் 4 அமர்வுகளில் இதுவரையில் 129 காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியம் வழங்கியிருப்பதுடன், 387 பேர் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

    இன்றைய அமர்வின் போது ஆணைக்குழுவினால் கேட்கப்பட்ட, வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்றதா? அரசாங்கம் உதவி செய்கின்றதா? என்பன போன்ற கேள்விகளுக்கு மக்கள் கடும் தொனியில் எங்களுக்கு காணியும் வேண்டாம், வீடும் வேண்டாம் ஒப்படைத்த பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என கூறிவிட்டனர்.

    மேலும் இன்றைய அமர்வுகளில் படையினருக்கு எதிரான அதிக சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எமக்கு வீடும் வேண்டாம் வளவும் வேண்டாம் எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள்! - ஆணைக்குழு முன் தாய் வேண்டுகோள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top