பொரளைஇ லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பொலிஸாரினால் வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு
வழங்கப்பட்ட தகவல் ஒன்றின்
அடிப்படையிலேயே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும்
சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய தாயை பொலிஸார் கைது
செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை
கழுத்து நெரிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஆறு வயதான
பெண் குழந்தை பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில்
உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து அது தொடர்பிலான தகவல்
வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே விசாரணைகளை
மேற்கொண்ட பொலிஸார் அந்த சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதான இளம் தாயை
கைது செய்துள்ளனர்.
அத்துடன் சிறுமியின் 7 வயது நிரம்பிய சகோதரனிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றினையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தாய் அந்த ஆறு வயது சிறுமியை தாக்குவதை
அப்போது அவ்வீட்டில் இருந்துள்ள 7 வயதான சகோதரன் நேரில் கண்டுள்ளதை
அடுத்தே அவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக வெல்லம்பிட்டி
பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கேசரிக்கு குறிப்பிட்டார்.
இந் நிலையில் தனது தாய், தங்கையின்
கழுத்தை நெரித்து கைகால்களால் தாறு மாறாக தங்கையை தாக்கியதாக
சம்பவத்தை நேரில் பார்த்த 7 வயது சிறுவனின் வாக்கு மூலத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரியிடம் சுட்டிக்காட்டினார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார்
மேற்கொண்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளில், பாத்திமா சபீய்யா என்ற ஆறு
வயது சிறுமி வீட்டினுள் மலசலம் கழித்தமையினாலேயே அவரது தாயினால்
இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இறந்த சிறுமி வீட்டினுள் சிறு நீர்
கழித்ததாக கூறி முதலில் தாயினால் பலமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால்
அந்த சிறுமி வீட்டின் படிக்கட்டு ஒன்றில் இடறி விழுந்துள்ளாள். அப்போது
அந்த சிறுமியின் கழுத்தை நெரித்துள்ள தாய் மீண்டும் தாக்குதல்
நடத்தியுள்ளார். இது தொடர்பில் இறந்த சிறுமியின் சகோதரன் விரிவான
வாக்கு மூலம் ஒன்றை வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாக
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் பொலிஸ் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
குறித்த தாய் இதற்கு முன்னர் பல
சந்தர்ப்பங்களிலும் அந்த சிறுமியின் மர்மஸ்தானப் பகுதியை தீயினால்
சுட்டு காயம் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பிலும் தற்போது
முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் தகவல்கள்
வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி மேலும்
குறிப்பிட்டார்.
அவ்வறான தீ காயங்களை இறந்த சிறுமியின் குறித்த பிரதேசங்கள் அவதானிக்க முடிவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள
சிறுமியின் பெற்றோர் ஏற்கனவே விவாகரத்தாகி மீண்டும் ஒன்று சேர்ந்தவர்கள் என
தெரிவிக்கும் பொலிஸார் தாயை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தி
வருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.- வீரகேசரி
0 comments:
Post a Comment