• Latest News

    November 19, 2014

    உங்கள் குழந்தை தொழில்நுட்ப அடிமையாவதற்கான ஐந்து காரணங்கள்!!!

    நாம் குழந்தைகளாக இருந்தபோது தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை வரும் ‘ஒளியும் ஒலியும்’ பார்ப்பதற்கு சண்டை போட்டுக்கொண்டு வரிசையில் நின்றோம். ஆனால் வெறும் 15 ஆண்டுகளில் இன்றைய தொழில்நுட்பங்கள் அவற்றையெல்லாம் வெகு தொலைவில் பின்னோக்கி துரத்திவிட்டன. இதனால் நாம் மிக விரைவாக முன்னேறினாலும், நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு நாம் என்ன கொடுக்கப்போகிறோம்? என்ற பயமும் சேர்ந்தே வரும் நிலையாகிவிட்டது. நமக்கு நம் முன்னோர்கள் பயிற்றுவித்த தற்காப்புக் கலைகள், பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்றவை நமது சந்ததியினருக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது.

    தற்போதைய குழந்தைகள் பிறக்கும்போதே கைத்தொலைபேசியுடன் தான் (செல்போன்) பிறக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு, கையடக்க தொழில்நுட்ப பொருட்களின் வளர்ச்சி அதிவேகமாக உள்ளது. இத்துடன் இணையமும் இணைந்துவிட்டால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான். இவர்களும் நம் சிறுவயதினைப் போல்தான் விளையாடுகிறார்கள், ஆனால் கணினி, தொலைபேசி போன்றவற்றில் விளையாடுகிறார்கள், எத்தகைய உடல் உழைப்பும் இல்லாமல் தேவையானதை பெற வேண்டுமென எண்ணத்தினை சிறு வயதுமுதலே வளர்க்க ஆரம்பிக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தால் கிடைக்கும் அறிவாற்றல் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான குழந்தைகளை இது பாதிக்கிறது, என்பது நிதர்சனமான உண்மை. அப்படி ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

    சமூகத் திறமைகளைக் குறைக்கும்
    இதனை நேரடியாகவே நாம் பல குழந்தைகளிடம் பார்த்திருப்போம். ஒரு சில குழந்தைகள், பெற்றோர்கள் சொல்வது என்னவென்று கூட கேட்காமல் கணினியின் அல்லது தொலைபேசியின் திரையினை வெகுநேரம் பார்த்தபடி இருப்பார்கள். இதேபோல் கிராமத்தில் இருந்தால் பேய் பிடித்துவிட்டது என்று அடுத்த பூஜைக்கு ஏற்பாடு செய்வார்கள், அந்தளவிற்கு தொழில்நுட்ப பொருட்களில் மூழ்கிப்போய் இருப்பார்கள். இது பெரும்பாலான பெற்றோர்களின் கவலையும் கூட, சிறு வயதில் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவதற்காக நாம் தொலைபேசியினை கொடுத்ததன் விளைவினை எண்ணி அவர்கள் பல நாள் வருந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெரும்பாலான குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடவோ, பேசவோ கூட செய்யாமல் பிற உயிரற்ற பொருட்களுடனே நேரத்தினை செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகளின் சமூக பங்கீடு பெருமளவில் குறைக்கப்படுகிறது. இது மக்களிடம் நடத்தப்பட்ட சேகரிக்கப்பட்ட விவரங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புற்றுநோய் அபாயம்!!!
    சைன்ஸ்டைரக்ட் (Sciencedirect.com) என்ற இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில் அதிர்ச்சியடையத்தக்க தகவல் கிடைத்துள்ளது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் இந்த கையடக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் மைக்ரோவேவ் (microwave) எனப்படும் கதிரியக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தலைப்பகுதி பெரியோர்களை விட மெல்லியதாகவும், திசுக்கள் மிருதுவானதாகவும் இருப்பதால் கதிரியக்கத்தின் காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்சனைகளும் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தொலைபேசி சார்ந்த பொருட்களில் இருந்து வருகிறது.

    கண் கோளாறு
    ஒரு சாதாரண பொருளை சிறிது நேரம் உற்று பார்த்தாலே நமக்கு கண்களில் வலி ஏற்படும், ஆனால் குழந்தைகள் தொலைபேசி திரையினை பல மணி நேரம் கவனிக்கின்றனர். இதனால் அவர்களின் கண்களில் குறைபாடு ஏற்பட பல வாய்ப்புகள் இருப்பதாக ஹிப்போக்ராட்டியா வெளியிட்ட மருத்துவ ஆராய்ச்சி அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. வெகுநேரம் கணினியினையோ அல்லது பிற சாதனங்களையோ பார்த்துக்கொண்டிருப்பதால், கண்களில் ஈரப்பதம் குறைகிறது. மேலும் கண்கள் மங்கலாக தெரியத் தோன்றும், அடிக்கடி தலைவலியும் ஏற்படத் துவங்கும், இவற்றை அறிகுறிகளாக வைத்தாவது நமது விழிப்புணர்வை ஆரம்பிக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சனை குழந்தைகளுக்குத்தான்.

    பொருள் இழப்பு
    இது ஈடுகெட்ட கூடிய இழப்பீடு என்றாலும் நடுத்தரவர்க்க குடும்பங்களுக்கு பிரச்சனை தான். சரியான வழிமுறையில்லாமல் குழந்தைகள் பொருட்களைக் கையாளும்போது அவை சில நேரங்களில் உடைந்துவிடுகின்றன. அவற்றின் மதிப்பு என்னவென்று கூட அவர்களுக்குத் தெரியாது. இன்னும் ஒரு சில குழந்தைகள் செல்போன் அழுக்காகிவிட்டாலோ அல்லது தவறி கீழே போட்டுவிட்டு அசுத்தமடைந்துவிட்டாலோ, அதனை தண்ணீரில் கழுவும் நிலையில் கூட உள்ளனர். இது மற்றவர்களுக்கு சிரிக்கக்கூடியதாக இருந்தாலும் அதை சம்பாதிக்க போராடியவர்க்கு வருத்தமாகத்தான் தெரியும்.

    மன அழுத்தம்
    தொழில்நுட்பத்தில் மூழ்கிப்போன குழந்தைகள் உறக்கத்தில் கூட, ‘அடி, உதை’ என்று விளையாட்டு மோகத்துடன் இருக்கின்றனர். இது அப்படியே பழகிப்போவதால் அவர்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கிறது. அத்துடன் இது அவர்களின் இயல்பான நடத்தையிலும் மாற்றத்தினைக் கொண்டு வருகிறது. நன்றாக படிக்கும் மாணவர்கள் விளையாட்டுப்போக்கினால் படிப்பு பாழாகும் நிலை ஏற்படுகிறது. கார்னெகியா மெல்லான் பல்கலைக்கழகத்தினால் (Carnegie Mellon University ) நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக குறிப்பிட்டுள்ளனர்.

    பெரியோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல், குழந்தைகள் பயன்படுத்தும் பெருவாரியான தொழில்நுட்ப பொருட்களால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகக் கூடிய நிலை ஏற்படும் என்று சொன்னால் அது மிகையாகாது. சரியான வழிகாட்டுதல் இல்லாத தொழில்நுட்பம் ஆக்கத்தினை விட அழிவிற்கே பயன்படும் என்பதை நாம் கண்கூடாகவே பல இடங்களில் பார்த்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையினை சாதாரண தொழில்நுட்பத்தினால் சிதைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    கவனமும், பராமரிப்பும் உங்கள் கையில் தான் உள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உங்கள் குழந்தை தொழில்நுட்ப அடிமையாவதற்கான ஐந்து காரணங்கள்!!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top