எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி
சபையைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக பல்வேறுபட்ட
தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாயினும், அண்மையில் அவ்வூரைச் சேர்ந்த பலமட்டங்களையும் சார்ந்த முக்கிய
உறுப்பினர்கள் சிலர் சேரந்து உருவாக்கிய சாய்ந்தமருது நலன்புரி மன்றம் (SAINTHAMARUTHU WELFARE
FORUM) என்ற அமைப்பின் தோற்றத்தின் பின்னர் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை என்ற நியாயமான கோரிக்கை
பாரியளவில் மக்கள் மயப்படுத்தப்பட்டு இன்று சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை
மலர்வதற்கான சகுனம் பிறந்துள்ளது.
அந்த அமைப்பினர், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையைப் பெறும் நோக்கோடு, ஒரு கட்டுக்கோப்புடன் பலவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதை
அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதன்படி, அவர்கள் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரான கரு ஜயசூரிய அவர்களை
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்திருந்தார்கள்.
அண்மையில், அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவரையும் சந்தித்து அது விடயமாக வெற்றிகரமான கலந்துரையாடலை
மேற்கொண்டார்கள்.
அதன் அடுத்த கட்டமாக, அவர்கள் ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேன அவர்களுக்கு ஒரு கடிதத்தை
அனுப்பியிருந்தார்கள். ஜனாதிபதியும் அவர்களின் கடிதத்தின் பெறுமதியை உணர்ந்தவராக, குறித்த விடயத்தை அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களுக்குத்
தெரியப்படுத்துமாறும், அது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரைக்
கேட்டுக்கொள்ளுமாறும் தனது பிரத்தியேக செயலாளரைப் பணித்திருந்தார் என்பதை குறித்த
கடிதத்தின் பிரதி மெய்ப்பிக்கிறது.
நடக்கவிருக்கும் பாராளுமன்றப்
பொதுத்தேர்தலின் பின்னர் தமது முயற்சியைத் தொடரவிருப்பதாகத் தெரிவிக்கும் அந்த
அமைப்பினர், “சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றிட யாரையும் சந்திப்போம், எதனையும் செய்வோம”; என்பதை தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதுடன், பக்கச்சார்பற்ற முறையில் தமது நடவடிக்கைளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு அரசியல்
கட்சிகளும் தலைசாய்க்கத் தொடங்கியுள்ள இவ்வேளையில் அண்மையில் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க அவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment