மக்கள் விடுதலை முன்னணியானது இவ்வரசு தேர்தலை பிற்போடுவதை எதிர்த்து போராட வருமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது எமது பலம், தேவை என்பவற்றை ஜே.வி.பி அறிந்ததன் வெளிப்பாடே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு அரசு தேர்தலை பிற்போடுவதானது மக்களது உரிமைகளை மறுக்கும் செயற்பாடுகளாகும். தற்போதைய அரசானது ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி தேர்தலை பிற்போட்டுக்கொண்டே வருகிறது. இது ஆரோக்கியமான செயற்பாடல்ல. அரசாங்கத்தின் இச் செயற்பாட்டினை ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் எதிர்த்து வருகின்றனர். தேர்தல் பிற்போடுவதனை மையப்படுத்தி பலமான போராட்டங்கள் கருக்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் ஜே.வி.பியானது கூட்டு எதிர்க்கட்சியையும் அழைத்துள்ளது. பொதுவாக ஜே.வி.பியின் போராட்டங்கள் தனித்தே அமையும். அவர்கள் தங்களது வழமைக்கு மாறாக கூட்டு எதிர்க்கட்சியினரை அழைத்துள்ளனர். இன்றைய இலங்கை அரசியலை தாங்கள் தனித்து சென்றால் வெற்றி பெற முடியாது, இவ்வரசை எதிர்த்து வெற்றிபெற கூட்டு எதிர்க்கட்சியே பொருத்தமானது என தங்களது பலவீனத்தையும் கூட்டு எதிர்க்கட்சியின் பலத்தையும் அறிந்ததன் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்த்து செயற்பட்ட ஜே.வி.பியானது இன்று இந்த நிலைக்கு வந்துள்ளமையானது, இவ்வாட்சியானது மிகவும் பாதகமான ஆட்சி என்பதையும் மறைமுகமாக கூறுகிறது. அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடுமையாக எதிர்த்து செயற்பட்ட ஜே.வி.பி கூறுவதானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குற்றங்களை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.
இவ்வாறு தேர்தல் பிற்போடப்படுவதை எதிர்த்து போராட அழைப்பு விடுக்கும் ஜே.வி.பியானது மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து இவ்வரசின் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிக்குள் சிக்கி மாகாண சபை தேர்தல்களை பிற்போட காரணமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் உரிமையை மறுத்து, தேர்தல் பிற்போடப்படுவதை எதிர்த்து கதைக்கும் உண்மையான தகுதி கூட்டு எதிர்க்கட்சியினருக்கே உள்ளமை குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment