மகனை எரியும் கொள்ளியால் சூடு வைத்தார் என்ற குற்றத்தின் பேரில் தந்தையொருவரை நேற்றுமுன்தினம்(02) தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை யொக்ஸ்போட் தோட்டத்தில் வசிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் அயலவர் வீடொன்றிலிருந்த பென்ரைவ் (flash drive) ஒன்றினை களவாடியதாக அவருடைய தந்தைக்கு தெரியவந்தது.
இந்நிலையில் கோபமடைந்த குறித்த சிறுவனின் தந்தை சிறுவனை நாற்காலியில் கை கால்களை கட்டி வைத்து சிறுவனின் முகத்திலும் கைகளிலும் எரியும் நெருப்பு கொள்ளியினால் சூடு வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 48 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையாவார்.
காயங்களுக்குள்ளான சிறுவன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருடைய தந்தையை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment