அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள்
சபையில் ஜனநாயகக் கட்சியினர், முறையான குற்றச்சாட்டு விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் துணை
ஜனாதிபதியுமான ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்த பிற நாட்டு உதவியை நாடினார்
என ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சியின் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையிலேயே, டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடனான
தொடர்புகள் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட
வேண்டுமா என்பது குறித்து விசாரணை நடத்த ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ
பிடனின் மகனைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன, புரிஸ்மா நிறுவனத்தின்
மீதான விசாரணையை, பிடன் நிறுத்திவிட்டார், அதன் பின்னணி பற்றி நிறைய பேர்
அறிய விரும்புகிறார்கள்.
ஆகையினால் விசாரணை நடத்துங்கள்” என ட்ரம்ப்
உக்ரைனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த ஜூலை 25ம் திகதி, உக்ரைன்
வோலோடிமைர் ஜெலென்ஸ்கியிடம் தொலைபேசியில் உரையாடிய ட்ரம்ப் இந்த
கோரிக்கையினை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஜனநாயக கட்சியின்
தலைவரும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்த
பிற நாட்டு உதவியை நாடினார் என ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
தகுதி நீக்கம் நடவடிக்கை எப்படி நடைபெறும்?:
அமெரிக்க அரசியல் சாசனம், ஜனாதிபதியின் தகுதி நீக்கம் தொடர்பாக இப்படி வரையறுத்துள்ளது
“லஞ்சம்,
ஊழல், தேசத்துரோகம், பெரிய குற்றச் செயல் அல்லது தவறான நடவடிக்கைகள்
ஆகியவற்றில் அதிபர் ஈடுபட்டதாக தெரிந்தால், அவருக்கு எதிராக பதவி நீக்க
தீர்மானத்தை கொண்டுவரலாம்” இவ்வாறு அரசியல் சாசனம் தெளிவாக
வரையறுத்துள்ளது.
பிரதிநிதிகள் சபையின் எந்த ஒரு உறுப்பினர்
வேண்டுமானாலும் ஜனாதிபதி மீது மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம்
இருப்பதாக தெரியவந்தால் தகுதிநீக்க தீர்மானத்தை முன்மொழியலாம்.
இந்த
தீர்மானத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு, அதாவது 51 சதவீதம் உறுப்பினர்களின்
ஆதரவு கிடைத்தால் அந்த பிரச்சினை விசாரணைக்கு உட்படுத்தப்படும். இதன் பிறகு
செனட் சபையில் விசாரணை ஆரம்பம் ஆகும்.
இந்த விசாரணையை அமெரிக்க உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையிடுவார். பிரதிநிதிகள் சபை சார்பில்
வாதிடுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். செனட்டர்கள் நீதிபதி ஸ்தானத்தில்
இருப்பார்கள். ஜனாதிபதி தனக்காக வாதிடுவதற்கு வழக்கறிஞர்களை நியமிக்கலாம்.
விசாரணையின்
முடிவில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெறும். மூன்றில் இரண்டு பங்கு
ஆதரவு.. அதாவது 67% செனட்சபை உறுப்பினர்களாவது, அதிபர் மீது தவறு இருப்பதாக
வாக்களித்தால் அதிபர் அவரது பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
அப்படி
நடந்தால் அதன்பிறகு, துணை ஜனாதிபதி, ஜனாதிபதிக்கான பொறுப்பு வகிப்பார்.
ஆனால் அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஒரு ஜனாதிபதியும் தகுதிநீக்க
அஸ்திரம் மூலமாக தகுதி நீக்கப்பட்டதாக, வரலாறு இல்லை.
இந்த அஸ்திரம்
எடுக்கப்படும் என பலமுறை எதிர்க்கட்சிகளால் மிரட்டலுக்கு
உட்படுத்தப்பட்டாலும் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இரு ஜனாதிபதிகள் தான்
தகுதிநீக்க தீர்மானத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அமெரிக்காவின்
42வது ஜனாதிபதி பில் கிளின்டன் லேட்டஸ்ட்டாக, இவ்வாறு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டவர். மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு
இருந்ததாக எழுந்த, குற்றச்சாட்டு தொடர்பாக இந்த தகுதிநீக்க அஸ்திரம்
எடுக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு செனட் சபையில் விசாரணை நடந்தது.
ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியவில்லை.
இதனால் கிளிண்டன் பதவியிலிருந்து தப்பினார்.
இதற்கு முன்பாக 1868ஆம் ஆண்டு அமெரிக்காவின் 17வது ஜனாதிபதி ஆண்ட்ரியு ஜான்சனுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் முன்மொழியப்பட்டது.
அதுவும்
தோல்வியில் தான் முடிந்தது. அப்படியானால் டொனால்ட் ட்ரம்ப்புக்கு, எதிரான
தகுதிநீக்க அஸ்திரம் பலிக்குமா, பலிக்காதா என்ற கேள்வி எழக்கூடும்.
செனட்
சபையில் டொனால்ட் ட்ரம்ப்பின், குடியரசு கட்சி தான் அதிக உறுப்பினர்களைக்
கொண்டுள்ளது. அவரது கட்சி உறுப்பினர்களே அவருக்கு எதிராக வாக்களித்தால்
மட்டும்தான் அவரைப் பதவியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உருவாகும்.
ஆனால்
பெரும்பான்மையான அவரது கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ட்ரம்பு
மீது நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர். எனவே பதவி நீக்க தீர்மானம்
தோல்வியில்தான் முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

0 comments:
Post a Comment