இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில்தான் 1 மில்லியன் சுவாசக்
கவசங்களுடன் சீனாவில் இருந்து இரண்டாவது விமானம் பிரான்சை வந்தடைந்துள்ளது
என பாரிஸிலிருந்து சுதன்ராஜ் எழுதியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்
காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இதேநாளில்தான்,
கொரோனா நுண்ணுயிரியை, “சீன வைரஸ்” என அமெரிக்க அதிபர் குறிப்பிட்ட விடயம்,
வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியாக விமர்சிக்கப்படுகின்றது.
மறுபுறம் வைரஸ் தொற்று எவருக்கும் ஏற்படாத நாளாக இன்றைய நாளை சீனா அறிவித்து அகமகிழ்க்கின்றது.
இவ்வாறு, வைரஸ் தொற்றுக்கு சமாந்திரமாக சீனாவும் பேசுபொருளாக மாறியுள்ளது.
வைரஸை
தடுப்பதற்கான மருந்து, எவ்வாறு இது உருவாகியது என்பது பற்றிதான்
ஆராய்சிகள் ஒருபுறமெனில், இந்த வைரஸ் விவகாரத்தில் அரசியல்,பொருளாதார
வீழ்ச்சி, வர்த்தகம் என பல்வேறு கணக்குவழக்குகள் நடந்து கொண்டிருக்க, மனித
நேயச் செயற்பாடுகள் அச்சத்தில் உள்ள மனிதகுலத்திற்கு ஆறுதலைத் தந்து
கொண்டுள்ளது.
சீனாவின் வுஹன் மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்று பரவத்
தொடங்கிய போது, சீன அரசு அதுபற்றி பெரிதாக அல்லட்டிக் கொள்ளவில்லை. ஆனால்
ஒரு கட்டத்தில் அதன் ஆபத்தை உணர்ந்த சீன (அரசு) டிராகன் விழித்துக்
கொண்டது.
“சீனா வைரஸ்” செய்திகளாகவும், இதற்கு சீனர்களின்
உணவுப்பழக்க வழக்கமே காரணமென தமது ஆய்வுகளை நடத்திக் கொண்டும், கண்டம்
விட்டு கண்டம் பாய்கின்ற ஏவுகணைகளோடும் மேற்குலகம் இருந்த பொழுதுதான்,
“வைரஸ்” கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து ஐரோப்பாவில் காலடி வைத்தது.
சற்றும்
எதிர்பாராத நிலையில், கண்டங்களை கடந்த வைரஸின் தாக்குதலால் தற்போது
மேற்குலகமே (ஐரோப்பா-அமெரிக்கா-ஒஸ்றேலியா) அதிர்ந்து போயுள்ளது.
நிலைகுலைந்து காணப்படுகின்றது.
“தேசமாக திரள்வோம்” என அழைப்பு
விடுத்த பிரான்சின் அதிபர் ஏமானுவல் மக்ரோன், கண்ணுக்கு புலப்படாத வைரஸ்
தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் யுத்தத்தில் உள்ளோம் என யுத்த பிரகடனத்தை
செய்தார். இந்த யுத்தத்தல் வெல்ல அனைவரையும் அர்ப்பணிப்போடு தேசமாக
திரளமாறு அழைத்தார்.
சீனா தேசமாக திரண்டு, தனது அனைத்து
கட்டுமானங்களையும் வைரஸ் தொற்றுக்கு எதிராக களமிறக்கி, மூன்றே மாதத்தில்
அதனை வெற்றிக்கண்டு நிற்கின்றது.
பாதிப்புக்கு உள்ளான மாகாணத்தில் பல
கோடி மக்களை தனிமைப்படுத்தி, நோயாளர்களுக்கான மருத்துவ மனைகளை குறுகிய
நாட்களில் நிறுவி, பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து, நவீன
தொழிநுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி, அனைத்து துறைசார் மனித வளங்களை
அணிதிரட்டி என தேசமாக சிந்தித்து, தேசமாக வைரஸை எதிர்கொண்டு வெற்றிவாகை
சூடி நிற்கின்றது.
சீன வைரஸ் என சீன தேசத்தை ஏளனப்படுத்தி,
சீனர்களுக்கு எதிரான வெறுப்புணர்வையெல்லாம் வெளிப்படுத்திய மேற்குலக
அரசியல் பண்பாடும், சமூகப்பண்பாடும் தற்போது சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு
‘வைரஸ்” அவர்களை தள்ளியுள்ளது.
இத்தாலிக்குள் புகுந்த வைரஸ் பல நூறு
உயிர்களை பலியெடுத்து, பல ஆயிரம் பேரிடம் தொற்றி அத்தேசத்தையே தடுமாற
வைத்துக் கொண்டிருந்த வேளையில், பிரான்ஸ், ஜேர்மனி மேற்குலக நாடுகள்
மருத்துவபொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதனை தடை செய்தது. இதற்கு
உள்நாட்டு தேவையினை காரணங்காட்டியது.
தனது தேசத்தில் வைரஸ் தொற்றினைக் கட்டுக்கொண்ட அனுபவத்தோடும், மருத்துவ உபகரண்கள், மருத்துவ குழுவோடு, சீனா இத்தாலியை வந்தடைந்தது.
ஐரோப்பிய
ஒன்றியத்தில் தன்னையும் ஒரு தேசமாக இணைத்திருக்கின்ற இத்தாலி, தான்
சந்தித்தித் கொண்டுள்ள இக்கட்டான சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் நாடுகள்,
தனக்கு என்ன செய்தது என்ற நிலையில், சீனாவின் உதவியை “நன்றி சீனா! நன்றி
சீனா!” தேசமாக சீனாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இத்தாலிக்கு
மட்டுமல்ல, ஆபிரிக்க நாடுகள், ஈரான், ஈராக், பெல்ஜியம், செர்பியா ஆகிய
நாடுகளுக்கும் சீனா தோழமையோடு மருத்துவ உபகரணங்களை வாரி வழங்கி வருகின்றது.
இத்தாலி,
வைரஸ் தொற்றினால் நெருக்கடியினை சந்தித் கொண்டிருந்த வேளை, அதன் கனதியை
உணராத பிரான்ஸ், மூன்று வாரங்களின் பின்னர் விழித்துக் கொண்ட போது,
நோயாளர்களுக்கு, மருத்துவ பிரிவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான
இருக்கவில்லை. சுவாசக்கவசங்கள் மருத்துவதாதிகளுக்கே இல்லாத நிலை நாட்டில்
ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் வைரஸ் அல்ல, சிகிச்சையினை
முழுமையாக வழங்குவதற்கான போதுமான மருத்துவ வசதிகள் அற்ற நிலையே காரணம் என
குற்றச்சாட்டுகள் உள்நாட்டில் எழத்தொடங்கியுள்ளன.
பிரான்சின்
நிலையினை உணர்ந்து கொண்ட நிலையில்தான், முதல் விமானத்தில் ஒக்சிஜன் உட்பட
மருத்துவ உபகரணங்களையும், இரண்டாம் விமானத்தில் 10 இலட்சம் சுவாசக்
கவசங்களையும் சீனா அனுப்பி வைத்தது.
சீனா, இன்று கொரோனா வைரஸினால்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உதவிகளை “மனிதநேய தோழமை” உதவிகள் என
குறிப்பிடும் அதேவேளை, தனது சீனாவில் இருந்து ஐரோப்பா வரை நீண்ட தனது
பட்டுப்பாதை மூலோபாயத்தின் ஒரு பகுதி செயற்பாடென குறிப்பிடுகின்றது.
தனது
மனித நேய உதவியின் ஊடாக, தனது அரசியல் செயலை வலுப்படுத்தி வருகின்றது.
சீனாவின் இந்த உதவிகள் சீனா தொடர்பிலான ஓர் நல்ல எண்ணப்பாட்டை
பொதுமக்களிடத்தில் எழ வைத்துள்ளது.
இது சீனாவின் அரசியலுக்கு
கிடைத்து வரும் வெற்றி. மறுபுறம் கொரோன வைரஸை மையப்படுத்தி அமெரிக்காவின்
அரசியல், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
குறிப்பாக கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக முகம்கொடுத்துள்ள நாடு ஈரான். அமெரிக்காவின் பொருளதாரத் தடையினால், கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
இதனை
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ்சுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர்
முகமது ஜாவீத் ஜாரிப் எழுதிய கடித்தின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
“அமெரிக்கா
எங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடையால், ஐரோப்பாவில் சிக்கி தவிக்கும்
ஈரானியர்களை விமானங்களில் அழைத்து வருவது கூட கடினமான விஷயமாகிவிட்டது.
கொரோனா
வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவ ஈரான் அரசு உருவாக்கிய கைபேசி செயலிகூட,
கூகுளால் சென்சார் செய்யப்படுகின்றது. உடனடியாக பொருளாதார தடையை விலக்கி
மருத்துவ கொள்முதலுக்கான வழியினை ஏற்படு வலியுறுத்த வேண்டும்.”
ஒரு
கொடிய வியாதியால் மட்டுமல்ல, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளும்
ஈரானின் உயிர்களை பலிகளுக்கு காரணம் என்பது இந்த கடிதத்தின் ஊடாக
வெளிப்படுகின்றது.
கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தை உருவாக்குவதற்கான
பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஜேர்மன் விஞ்ஞானிகளை தனது பக்கம்
இழுப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப விலைபேசிய விடயம், சர்வதேச
ஊடகமொன்றின் வழியே வெளிச்சத்துக்கு வந்ததும், கொரோனா வைரஸ் மருந்திற்கு
தனியொரு நாடு உரிமை கோரக்கூடாது என ஜி7 நாட்டுத் தலைவர் கூறியிருப்பதும்,
கொரோனாவிற்கு பின்னால் உள்ள வர்த்தக போட்டியையும் வெளிச்சம்
போட்டுக்காட்டுகின்றது.
இவ்வாறு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்,
உலகத்தை நோக்கிய மனிதநேயச் செயற்பாடு ஊடாக தனது அரசியலை வலுப்படுத்தும்
சீனாவும், மறுபக்கம் வணிகம், வெறுப்பரிசியல் என மேற்குலகத்தின் பலவீனமான
பக்கமும் வெளிப்படுகின்றது.
ஆனால், தமது தேசத்தை ஆக்கிரமித்து
உயிர்களை பலியெடுக்க முனையும் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரிக்கு எதிராக,
எல்லா நாட்டுத்தலைவர்களும் தமது உரைகளில் தவறவிடாத ஓர் வார்த்தை தேசமாக
திரள்வோம், தேசமாக எதிர்கொள்வோம் என்பதாகும்.
தமிழர் தேசமும், தேசமாக
சிந்தித்து கொரோனா வைரசில் இருந்து மட்டுமல்ல, தமிழர் தேசத்தை
ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத நுண்ணுயிரிகளில் இருந்து
விடுபவதற்கு தேசமாக திரளவேண்டும்.
அது தேர்தல் அரசியலாக அல்லாமல்,
தேசிய பேரியக்கமாக எழுச்சி கொண்டு எழவேண்டும். அது எல்லா நுண்ணுயிரிகளையும்
கொல்லும், வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.
thanks - tamilwin

0 comments:
Post a Comment