(ஆர்.யசி)
நாட்டு மக்கள் எந்த பாகுபாடும், இன பேதங்களும் இன்றி ஒன்றிணைந்து ஒரே நாடாக
மீள வேண்டிய தருணம் இதுவென அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக பீடங்கள்
தெரிவித்துள்ளன.
அரசாங்கம், மருத்துவத்துறையினர் மற்றும் பாதுகாப்பு துறைகளின் கடமை
பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து நாட்டின் பிரதான
பெளத்த பீடங்களான மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள
அறிவித்தலில் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுகுறித்து மல்வத்து அனுநாயக தேரரான நியங்கொட விஜிதசிறி தேரர் கூறுகையில்,
இன்று நிலவும் ஊரடங்கு சட்டம் மேலும் சில காலத்திற்கு நீடிக்க வேண்டும்
என்பதே பலரதும் கருத்தாக உள்ளது. ஆகவே இப்போதுள்ள நிலைமைகள் குறித்து
மக்கள் கவனம் செலுத்துவதுடன் சில கஷ்டங்களை மக்கள் தாங்கிக்கொள்ளக்கூடியதாக
இருக்க வேண்டும்.
அதே போல் மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சில வழிமுறைகளையும்
கையாள வேண்டும். அனர்த்த காலத்தில் அனைவரும் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு
ஒரு நாட்டவர்களாக எந்தவித பேதங்களையும் வெளிப்படுத்தாது செயற்பட்டால் அதன்
விளைவை மகிழ்ச்சியாக எம் அனைவராலும் அனுபவிக்க முடியும். அரசாங்கம் மிகக்
கவனமாக மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்
கூறியுள்ளார்.
அஸ்கிரிய அனுநாயக தேரரான உபாலி தேரர் கூறுகையில்,
நாட்டின் நிலைமை மிகவும் அச்சத்துக்குள்ளாகியுள்ளது. வழமையான சுகபோக
வாழ்க்கையை இந்த நாட்களில் மக்கள் அனுபவிக்க முடியாது போயுள்ள போதிலும்
அதனை ஏற்றுக்கொண்டு மக்கள் நிலைமைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
ஒருபுறம் நோயாளர்களை குணப்படுத்தி இந்த நோயினை முழுமையாக இல்லாதொழிக்க
வேண்டியுள்ளது. இதில் அரசாங்கம் வைத்திய சேவையினர், முப்படையினர் மற்றும்
பொலிசார் என அனைவருக்கும் அதிக பொறுப்பும் கடமைகளும் இப்போது உள்ளது. ஆகவே
மக்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மற்றும் மருத்துவ சேவையினர்
வழங்கும் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி செயற்பட வேண்டும், நாமே எமக்கான
அழிவுகளை தேடிக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறினார்.

0 comments:
Post a Comment