(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில்
இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை இலங்கையில் அடையாளம்
காணப்பட்ட தொற்றாளர்கள் 190 பேர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய்
தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந் நிலையில் இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று பூரண
குணமடைந்து வெளியேறிய ஐவருடன் சேர்ந்து 49 பேர் இதுவரை குணமடைந்து வீடு
திரும்பியுள்ளதாகவும் அந்த தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந் நிலையில் 134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய்
வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இதனைவிட கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32
வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று இலங்கையில் 7 ஆவது கொரோனா மரணமாக பதிவான கல்கிசை
பகுதியில் வசித்த மானிக்கக் கல் வர்த்தகரின் இறுதிக் கிரியைகள் இன்று
கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றன.
இதன்போது குறித்த நபரின் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு கலந்துகொள்ள
அனுமதியளிக்கப்பட்ட நிலையில் சடலம் உரிய பாதுகப்பு வழி முறைகளுக்கு அமைய
தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலும் இரத்தினபுரி மாவட்டத்தின்
இரத்தினபுரி பகுதியிலும் விஷேட பாதுகபபு நடை முறைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று பகுதியில் கட்டாருக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய
ஒருவர், தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் கொரோனா தொற்றிருப்பதாக அடையாளம்
காணப்பட்ட நிலையில், அப்பகுதியின் 5 வீதிகள் முற்றாக மூடப்பட்டு
அப்பகுதியில் உள்ளோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை 7 ஆவது மரணமாக பதிவான கல்கிசை மாணிக்கக்கல் வர்த்தகருடன்
ஜேர்மன் சென்று திரும்பிய இரத்தினபுரி மாணிக்கக் கல் வர்த்தகரும், அவரது
மனைவி, மகளும் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில்
நேற்று அவர்களது மகனும், அம்மம்மாவும் தொற்றாளர்களாக அடையாளம்
காணப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் இரத்தினபுரியில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து
தொற்றாளர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் என்ற நிலையில் அவர்களுடன்
நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல்
நிலையத்துக்கு அனுப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சுகாதார அமைச்சின் தகவல்கள் பிரகாரம் அதிக தொற்றாளர்கள் இதுவரை மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 44 பேரும் களுத்துறை,
கம்பஹாவில் முறையே 26,16 என்ற ரீதியிலும் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 34
ஆகும். கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களில் தலா 7 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
ஏனைய தொற்றாளர்கள், இரத்தினபுரி, குருணாகல், காலி, மாத்தறை, கேகாலை,
மட்டக்களப்பு, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெளிநாட்டில் இருந்து வந்தும் அவ்வாறு வந்தவர்களுடன்
தொடர்புகளைப் பேணியவர்களுமாக இதுவரை 3459 பேர் இராணுவத்தின் பொறுப்பில்
தனிமைப்படுத்தலுக்குட்பட்டு குறித்த காலம் நிறைவடைந்து சென்றுள்ளனர்.
தற்போது இராணுவத்தினரின் பொறுப்பில் 1311 பேர் தொடர்ந்து
தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19
தொற்று பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை பிரிவின் தலைவரும் இராணுவ
தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார்.
0 comments:
Post a Comment