அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பை பேணிய 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 15 பாராளுமன்ற அதிகாரிகளை தனிமைப்படுத்தியுள்ளதுடன், நாளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் கண்டிப்பாக பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது,
அதேபோல் பிரதமரின் இணைப்பு செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது, இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுடன் நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் என 21 பாரளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யவும் சுகாதார தரப்பினரால் வலியுறுத்தப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ததில் அவர்கள் தொற்றாளர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் நேரடியாக தொடர்புபட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுடன் கடந்த 5 ஆம் திகதி அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் பிறந்தநாளில் தனது அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்களுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் சனத் நிஷாந்தவும் கலந்துகொண்டுள்ளார். எனவே இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உற்பட அமைச்சருடன் நேரடியாக தொடர்பை பேணிய நபர்கள் சகலரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் பணித்துள்ளனர்.
அதேபோல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுடன் தொடர்பை பேணியிருந்த பாராளுமன்ற அதிகாரிகள் 15 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாராளுமன்றத்தை தொற்றுநீக்கள் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை, நாளை மறுதினம் மற்றும் வெள்ளிக்கிழமையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் பாராளுமன்ற அதிகாரிகள் சகலருக்கும் பாராளுமன்ற வளாகத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள
வேண்டும் எனவும் சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
வலியுறுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment