(இராஜதுரை ஹஷான்)
தனியார் வகுப்புக்களை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக எடுக்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தனியார் வகுப்புக்கள் குறித்து பல முறைப்பாடுகள் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
எனினும் அவற்றை கண்காணிக்க கல்வி அமைச்சுக்கு அதிகாரம் கிடையாது. எவ்வாறிருப்பினும் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்வி முறைமை குறித்து முழுமையான பொறுப்பு கல்வி அமைச்சுக்கு உண்டு.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போது இணையவழியூடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனியார் வகுப்புக்களும் இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இதன் போது தனியார் வகுப்புக்களில் அதிக கட்டணம் முறையற்ற விதத்தில் அறவிடப்பட்டுள்ளன. கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒரு சில தனியார் வகுப்புக்களின் கற்றல் முறைமை சிறந்த முறைமையில் காணப்பட்டாலும் ஒரு சில தனியார் வகுப்புக்களின் கற்றல் நடவடிக்கைகள் இலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஒரு சிலர் முறையற்ற நோக்கங்களை தனியார் வகுப்புக்கள் ஊடாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆகவே தனியார் வகுப்புக்களை கண்காணிக்க தேவையான அதிகாரங்களை கல்வி அமைச்சுபெற்றுக் கொள்ள அமைச்சரவையில் யோசனை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment