• Latest News

    January 04, 2021

    சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த முயற்சிப்பதாகக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் - பாட்டலி சம்பிக்க ரணவக M.P

    (நா.தனுஜா)

    இலங்கையை விட வறிய நாடான உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்து எமது நாட்டின் சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த முயற்சிப்பதாகக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

    இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

    உலகின் பல்வேறு நாடுகள் தமது மக்களுக்கு கொவிட் - 19 தடுப்புமருந்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றி செயற்பட்டு வருகின்றன. இஸ்ரேல் அந்நாட்டு சனத்தொகையில் 10 சதவீதமானோருக்கு தடுப்புமருந்தை வழங்கிவிட்டது. 

    அதேபோன்று இந்தியாவும் இரண்டு தடுப்புமருந்துகளை உத்தியோகபூர்வமான ஏற்றுக்கொண்டிருப்பதுடன் அவற்றை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் எமது நாட்டில் மென்மேலும் கொரோனா வைரஸை பரவச்செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    ஏனெனில் கொவிட் - 19 தடுப்புமருந்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அதனூடாக தமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறு நிறைவேற்றிக்கொள்வது என்பது குறித்தே அரசாங்கம் கவனம்செலுத்திவருகின்றது. 

    அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களின் வேதனைக்குரலே எமக்கு அதிகம் கேட்கின்றது. அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமானப்பயணச்சீட்டு, தங்குவதற்கான விடுதிகளின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் முறையான செயற்திட்டங்கள் எவையும் வகுக்கப்படவில்லை.

    ஆனால் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவரான உதயங்க வீரதுங்க உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். உக்ரேனின் தலா வருமானம் இலங்கையின் தலா வருமானத்தை விடவும் குறைவாகும். உக்ரேன் என்பது இலங்கையை விடவும் வறியநாடு என்பதுடன், கடந்த காலங்களில் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது.

     அத்தகைய நாடொன்றிலிருந்து சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, எமது நாட்டின் சுற்றுலாப்பயணத்துறையை மேம்படுத்த முயற்சிப்பதென்பது மிகவும் நகைப்பிற்குரிய விடயமாகும்.

    அதுமாத்திரமன்றி, அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உக்ரேனுடன் தொடர்புடைய வகையில் இடம்பெற்ற மிக் விமானக்கொள்வனவு மோசடிக்குப் பதில் கூறவேண்டியவர்களின் ஒருவரே உதயங்க வீரதுங்க ஆவார். 

    அவ்வாறிருக்கையில் அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த முயற்சிப்பதாகக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் - பாட்டலி சம்பிக்க ரணவக M.P Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top