கல்வியை விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ள இராணுவ நிர்வாகத்தை  நிறுத்து, இலவச கல்வியை ஒழிப்பதற்காக இராணுவ இயந்திரத்தை அமைத்து தற்காலிகமாக சுருட்டிக்கொண்ட கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என கோரிக்கை விடுத்து அட்டன் நகரில் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய செயற்பாட்டளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை (05.08.2021) காலை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் புட்சிட்டிக்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தி அதை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கொண்டு பேரணி ஒன்றையும் முன்னெடுத்தனர். இந்த பேரணி புட்சிட்டி அருகில் ஆரம்பமாகி அட்டன்  நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் வரை முன்னெடுக்கப்பட்டது. 


அவ்விடத்தில்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்  கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.