• Latest News

    February 28, 2026

    நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு இலங்கை - பாகிஸ்தான் போட்டி முடிவில் தங்கி இருக்கிறது


    கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (27) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான போட்டியில் நியூஸிலாந்தை 3 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து 4 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

    இப் போட்டியில் நியூஸிலாந்து தோல்வி அடைந்ததால் அவ்வணி அரை இறுதிக்கு செல்லுமான இல்லையா என்பது இலங்கை - பாகிஸ்தான் போட்டி முடிவிலேயே தெரியவரும்.இலங்கையை 64 ஓட்டங்களால் வெற்றிகொண்டால் அல்லது இலங்கையினால் நிர்ணயிக்கப்படும் வெற்றி இலக்கை 13.1 ஓவர்களில் விரட்டிக்கடந்தால் பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெறுவதுடன் நியூஸிலாந்தின் வாய்ப்பு பறிபோகும். அது சாத்தியப்படுமா என்பதற்கான விடையை நாளைய போட்டிதான் தீர்மானிக்கும். ஒருவேளை நாளைய போட்டி மழையினால் கைவிடப்பட்டால் நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுவிடும்.

    இன்றைய போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

    இப் போட்டியில் மூன்று கட்டங்களில் வீழ்ச்சியை எதிர்கொண்ட இங்கிலாந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்நீச்சல் போட்டு இறுதியில் அபார வெற்றியீட்டியது.

    இங்கிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஃபில் சோல்ட் (2), ஜொஸ் பட்லர் (0) ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததால்  தடுமாற்றம் அடைந்தது. அணித் தலைவர் ஹெரி ப்றூக் (26), ஜேக்கப் பெத்தெல் (21) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தபோதிலும் இருவரும் 9 பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (58 - 4 விக்.)

    தொடர்ந்து டொம் பென்டன், சாம் கரன் (24) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சாம் கரன் களம் விட்டு வெளியேறினார்.மறுபக்கத்தில் டொம் பென்டன் ஒரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 33 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (117 - 6 விக்.)

    இந் நிலையில் கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 43 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

    வில் ஜெக்ஸ், ரெஹான் அஹ்மத் ஆகிய இருவரும் 18ஆவது ஓவரில் 21 ஓட்டங்களைப் பெற ஒரு உதிரியுடன் 22 ஓட்டங்கள் மொத்தமாக பெறப்பட்டது.தொடர்ந்து 19ஆவது ஓவரில் மேலும் 16 ஓட்டங்கள் குவிக்க்பபட்டதுடன் கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் பெறப்பட இங்கிலாந்து 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

    வில் ஜெக்ஸ் 18 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் ரெஹான் அஹ்மத் 7 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் ரச்சின் ரவிந்த்ரா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

    முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.நியூஸிலாந்து முதல் 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

    டிம் சீஃபேர்ட் (35), ஃபின் அலன் (29) ஆகிய இருவரும் 42 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

    அதன் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இணைப்பாட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

    இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனான ரச்சின் ரவிந்த்ரா (11), மார்க் செப்மன் (15), டெரில் மிச்செல் (3) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த க்லென் பிலிப்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். கோல் மெக்கொன்ச்சி 14 ஓட்டங்களைப் பெற்றார்.

    பந்தவீச்சில் வில் ஜெக்ஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரெஹான் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ் 

    Thanks: Virakesari 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு இலங்கை - பாகிஸ்தான் போட்டி முடிவில் தங்கி இருக்கிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top