எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படும் ஆபத்து உள்ளது. இந்நிலையில் அரசாங்கமோ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றாமல் மேலும் காயங்களை உருவாக்கவே முயற்சித்துவருகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி. ) பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவருகின்றது என்பதனை அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னராவது செயலில் காட்டவேண்டும். அத்துடன் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆ வது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய யோசனை வரலாம் என்ற அனர்த்தம் காணப்படுகின்றது. அமெரிக்கத் தரப்பில் இவ்வாறு அனர்த்தம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான நிலைமை ஒன்றை அரசாங்கமே உருவாக்கிக்கொண்டுவருகின்றது.
நாட்டில் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் சர்வதேச அழுத்தங்களை தடுத்திருக்கலாம்.
ஆனால்இ அரசாங்கம் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதிலோ காயங்களை ஆற்றுவதிலோ முன்னேற்றத்தை காட்டவில்லை. மாறாக யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பதிலாக புதிதாக காயங்களை உருவாக்கிக்கொண்டுவருகின்றது.
அந்தவகையில் பார்க்கும்போது இவ்வாறானதொரு நிலைமையை அரசாங்கமே உருவாக்கிக்கொண்டுள்ளது என்று கூறலாம். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. மனித உரிமை மீறல்கள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படவில்லை. எனவே சர்வதேச அழுத்தங்கள் வருவதற்கான அனர்த்தம் அதிகமாகவே காணப்படுகின்றது.
எப்படியிருப்பினும் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நாட்டின் மனித உரிமை நிலைமையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால் அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

0 comments:
Post a Comment