சுலைமான் றாபி-
சமூகத்தில்
ஒவ்வொருத்தருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட போதும் அந்தப்
பொறுப்புக்களை உரியவர்கள் செவ்வனே நிறைவு செய்து கொள்வது அவர்களின்
மீதுண்டான தலையாய கடமையாகும். இங்கு நீங்கள் பார்ப்பது வெளியூர்களின்
வீதிகளோ அல்லது அதன் குன்று குழிகளோ அல்ல! மாறாக இது நிந்தவூர் 2ம்
குறுக்குத்தெரு வீதியின் அவல நிலையாகும். உண்மையில் இவ்வீதியானது அன்றாடம்
அதிகமான மக்களால் பிரயோசனப்படுத்தப்படும் வீதியாகும். இதில் பாடசாலை
மாணவர்கள், முதியோர்கள், பாதசாரிகள், வாகன சாரதிகள் மற்றும் இன்னும்
அதிகமானோர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவ்வீதி நிந்தவூர்
மூங்கிலடிச் சந்தியிலிருந்து சுமார் 01 கிலோ மீற்றர் வரை கரடு முரடாகவே
காணப்படுகிறது. மழை காலங்களிலும் இன்னும் அதனை அண்டிய காலங்களிலும்
இவ்வீதியால் பயணம் செய்யும் பிரயாணிகளும், பாதசாரிகளும் முணு முணுத்துக்
கொண்டே செல்கின்றார்கள்.
ஆனால் இங்கிருக்கின்ற அரசியல் வாதிகளோ சொகுசான
வாகனங்களில் கொங்கிரீட் போடப்பட்ட வீதிகளாலே தங்கள் பயணங்களை மேற்கொண்டு
வருகின்றனர். ஏன் இவர்கள் இந்த வீதியால் மட்டும் பயணம் செய்வதில்லை??? இந்த
வீதி ஏழைகளுக்கு மட்டும் சொந்தமானதா??? அல்லது இவர்கள் இந்த வீதியால்
பயணம் செய்யும் பொது இதன் குறைகளை கண்டு கொள்ளாமல் பயணிக்கின்றார்களா??
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை
தவிசாளர், பிரதேச சபை எதிர்கட்சித்தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள்
மற்றும் அரசியல் பலம் படைத்த ஒப்பந்தக்காரர்கள் செறிந்து வாழும்
இப்பிரதேசத்தில் இவ்வீதியின் அவல நிலையை கண்டு கொள்ளாமல் விட்டது
மனவெதனயலிக்கின்ர விடயமாகக் காணப்படுகின்றது.
சந்துகளிலும், பொந்துகளிலும் கொட்டப்படும்
கொங்கிரீட்களும், போடப்படும் கிறவல்களும் மக்களுக்கு பிரயோசனம் அளித்தாலும்
ஒப்பீட்டு ரீதியில் அவைகள் பிரயோசனம் குன்றிய நிலையிலே காணப்படுகிறது.
மேலும் இந்த 2ம் குறுக்குத்தெரு வீதி கடந்த காலங்களில் தார் ஊற்றப்பட்டு
செப்பனிடப்பட்டு காணப்பட்ட போதும் கடந்த 08 வருடங்களுக்கு முன்பு தேசிய
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினரால் குழாய் நீர் பொருத்துவதற்காக
தோண்டப்பட்டு வேலைகள் நிறைவடைந்ததன் பிற்பாடும் இற்றை வரைக்கும் அது சீர்
செய்யப்படாமலே காணப்படுகிறது. இது இவ்வாறிருக்க இந்த வீதியின் இடையிடையே
காணப்படும் கரடு முரடான பகுதிகளாலும், குன்று குழிகளாலும் இரவு வேளைகளில்
துவிச்சக்கர வண்டிகளில் மூலமாக பயணிக்கும் பொது மக்கள் பல்வேறு
அசௌவ்கரியங்களை எதிர் கொள்கின்றார்கள். மேலும் இந்த வீதியில் காணப்படும்
ஒரு வடிகானின் மூடியில் ஒரு ஓட்டையும் அதன் மூலம் உருவாகும் வடிகான்
மூடிகளின் சேதங்களும் இன்னும் நிறைவு செய்யப்படாமல் காணப்படுகின்றது.
மேலும் இந்த வீதியில் காணப்படும் கரடு முரடான மற்றும் குன்று குழிகளை
ஓரளவு மக்கள் பயணிக்கும் அளவிற்கு நிந்தவூர் பிரதேச சபையிடம் காணப்படும்
JCB இயந்திரத்தினைக் கொண்டாவது சீர் செய்து கொடுப்பது அவர்களின் கடமை
அல்லவா??
மேலும் இவ்வாறான நிலைப்பாடொன்றிலே நிந்தவூர்
வைத்தியசாலை வீதியும், 1ம் குறுக்குத்தெரு வீதியும் காணப்படுகிறது. இந்த
அரசாங்கத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக மகநெகும, கமநெகும,
நெல்சிப் மற்றும் ஜைகா போன்ற திட்டங்கள் காணப்பட்டாலும் இவைகள் மூலமாக இந்த
வீதியின் குறைகளை நிறைவேற்ற இவ்வரசியல்வாதிகள் திரானியற்றுக்
காணப்படுகின்றார்களா?? என்ற கேள்வியும் மக்களிடத்திலே எழாமலில்லை!
பாராளுமன்ற உறுப்பினர்களால் மற்றும் மாகான சபை உறுப்பினரால் வெளி இடங்களில்
பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட போதும் உட்சுவர்களை
பூசி விட்டு வெளிச்சுவர்களை பூசலாம் அல்லவா?? வெறுமனே உரிமைகளை மட்டுமே
பேசிப்பேசி காலங்கடத்தி அறிக்கைளை விடாமல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய
உரிமைகளையும், அபிவிருத்தி சார் செயற்பாடுகளையும் பெற்றுக்கொடுக்க
வேண்டியது உங்களின் கடமையல்லவா??
எனவே நிந்தவூரில் அதிக மக்கள் பயணிக்கும் 2ம்
குறுக்குத்தெரு வீதியை அரசியல் பேதங்களை மறந்து அபிவிருத்தி செய்யவேண்டும்
என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.




0 comments:
Post a Comment