சுலைமான் றாபி;
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்.-
இந்நாட்டின்
இறைமையை எந்த ஒரு இனத்தவனும் மீற முடியாது. அதேபோன்று பொருளாதாரத்தடை
விதிக்கப்படும் போது ராஜபக்ஸ சகோதரர்கள் மட்டும் பாதிப்புக்கு
உள்ளாக்கப்படுவதில்லை. மாறாக இந்த நாட்டில் நாளாந்த வாழ்கையினை ஒட்டிக்
கொண்டிருக்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும்
பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், இன்று (02.02.2014) நிந்தவூரில் இயங்கி வரும்
IT Campus நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி நெறியை பூர்த்தி செய்த
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை
நிகழ்த்தும் போதே மாகாண சபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். .
ஒருவன்
ஒரு தொழிலை திருப்திப்படுகின்ற விதத்தில் அந்த தொழிலை அவன் விரும்புகின்ற
பொழுதுதான் அதில் தன்னிறைவு காண்கின்றான். எந்த தொழிலில் இளைஞர்களான
தங்களுக்கு அதிக நாட்டம் உள்ளதோ அந்த தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து
அதிலே தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்க வேண்டும். அவ்வாறு முயற்சிகள்
வெற்றியடையும் சந்தர்ப்பத்திலே எதிர்காலத்தில் மிளிர முடியும்.
இதற்காகத்தான் எமது அரசாங்கம் அதற்குரிய வழி வகைகளை உங்கள் முன்
சமர்ப்பித்துள்ளது. இதற்கு உதாரணம் "நெனசல" போன்ற கல்விக் கூடங்களாகும்.
தற்காலத்தில் தகவல் தொழில் நுட்பம் என்பது ஒரு மொழி போன்ற அத்தியாவசியமான
தொன்றாக மாறிவிட்டது. எமக்கு என்று கடமைகளும், உரிமைகளும் இருக்கின்றன.
நாம் எல்லோரும் சட்டத்தின் முன் சமம். சட்டம்தான் ஆட்சி செலுத்துகின்றது.
நாம் ஆட்சி செலுத்துவதில்லை. ஆகவே சட்டத்தின் ஆட்சியினை நாம் மேம்படுத்த
வேண்டும். சட்டத்தின் ஆட்சி இடம்பெற வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த
வேண்டும்.
எமது நாடு ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் யார்
விரும்பினாலும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரலாம். அரசியலமைப்பு எல்லா
நபர்களையும் சமம் என்று உறுப்புரை எடுத்துரைகின்றது. அந்த சமமான நபர்கள்
சட்டத்தினால் அல்லது அதிகாரத்தினால் சமநிலை மீறியவர்களாக நடாத்தப்படுகின்ற
போது உயர் நீதிமன்றிற்கு சென்று மனுச்செய்து தங்களின் உரிமைகளை
தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதனை உருப்புரைகள் கூறுகின்றன.
எமக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக அவைகளை அயல் வீட்டில் கொண்டு
முறையிடுவது உசிதம் இல்லை. ஜெனிவாவில் எமது பிரச்சனைகளை எடுத்துரைக்க
வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதியினை ஜெனீவா கண்டிக்க வேண்டும்.
வெளிநாட்டு அரசு ஒன்று எமது நாட்டின் ஜனாதிபதியினை தண்டிக்க வேண்டும் என்று
எமது நாட்டின் தலைவர்களையும், 30 வருட யுத்தத்தினை முடிவிற்ற்கு கொண்டு
வந்த இராணுவத்தினை தண்டிக்க வேண்டும் என்கின்ற பிரேரணையை ஒரு மாகாண சபை
நிறைவேற்றியுள்ளது. இது மிகப்பெரிய அநியாயமாகும். மக்களின் வாக்குகளால்
தெரிவு செய்யப்பட்ட அந்த அரசினைக் கண்டிக்க வேண்டும் இதன் மூலம்
வெளிநாடுகள் கால்பதிக்க வேண்டும் அதேபோன்று வெளிநாட்டுப் படைகள்
வரவேண்டும். எமது நாட்டிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப் படவேண்டும் என்று
இங்கு அரசியல் பேசப்படுகின்றது. இவைகள் அநியாயமான கோட்பாடாகும். இவைகளை
ஒரு போதும் நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
பொருளாதாரத்தடை விதிக்கப்படும் போது ராஜபக்ஸ
சகோதரர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதில்லை. மாறாக இந்த
நாட்டில் நாளாந்த வாழ்கையினை ஒட்டிக் கொண்டிருக்கின்ற சிங்கள, தமிழ்
மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
இதற்கு உதாரணம் அண்மையில் ஈரானுக்கு விதிக்கபட்ட பொருளாதாரத் தடையாகும்.
இதன் மூலம் நாம் அதிக பாடங்களை கற்றிருக்க வேண்டும். இந்த சுமைகளை தாங்க
முடியாமல் அந்த நாடு தற்போது சமாதான பேச்சு வார்த்தைக்கு போவதற்கு தயாராக
இருந்து கொண்டிருக்கின்றது. எமது நாட்டிற்கென்று ஒரு சட்டமும், வெளி
நாடுகளுக்கென்று இன்னொரு சட்டமும் இல்லை. எவ்வாறு குடிசனங்களுக்கென்று ஒரு
சட்டம் உள்ளதோ அதே போன்றுதான் அனைத்து நாடுகளும் சமமாக நோக்கப்படவேண்டும்
என்பதுதான் சர்வதேச சட்டமாகும். இதனை எமது சகோதரர்கள் உன்னிப்பாக கவனிக்க
வேண்டும். இந்த நாட்டில் என்ன நடக்கின்றது, சர்வதேசத்தில் என்ன நடக்கின்றது
என்று இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
எனவே ஒரு தமிழ் சகோதரன் நிம்மதியாக இருக்க முடியாமல்
ஒரு முஸ்லிம் சகோதரன் நிம்மதியாக இருக்க முடியாது! ஒரு முஸ்லிம் சகோதரன்
நிம்மதியாக இருக்க முடியாமல் ஒரு சிங்கள சகோதரன் நிம்மதியாக இருக்க
முடியாது! இது மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழல் எமது நாடில்
இருந்து கொண்டிருக்கின்றது. எமது இறைமைகளையும், மக்களிடையே இருக்கின்ற
பரஸ்பர புரிந்துணர்வுகளையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த
புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக ஜெனிவா சென்று முறையிடுவதினால் எமது
புரிந்துணர்வினை ஒரு போதும் வளர்க்க முடியாது! எமது புரிந்துணர்வுகளை
வளர்ப்பதற்கான அடித்தளங்களை இங்குதான் இட வேண்டும்! எமக்கிருக்கின்ற
கட்டமைப்புக்குள்தான் தீர்வினை எய்த வேண்டும் என தனதுரையில்
குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment