• Latest News

    February 03, 2014

    தியாகிகளால் பெறப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்போம்: ஹரீஸ் எம்.பி

    எஸ்.அஷ்ரப்கான்;
    இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தியாகிகளால் பெற்றுத்தரப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்து தாய்நாட்டை வெற்றிகொள்ள ஒன்றுபடவேண்டுமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    அவ்வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
    அந்நியநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது தேசத்தை மீட்டெடுத்த சுதந்திர இலங்கையின் தேசியத் தலைவர்களின் பங்களிப்பினை நினைவுபடுத்தி, அவர்களின் பங்களிப்பினை கௌரவித்து எமது தாய்நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் தேசிய சுதந்திர தின நாளான பெப்ரவரி 04 ஆம் திகதியை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    இத்தினத்தில் வீடுகள், நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், வாகனங்கள் என்பவற்றில் எமது தேசிய கொடியினை பறக்கவிட்டு மூவின மக்களும் தங்களின் ஒற்றுமையையும், தாய் நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்த முனைய வேண்டும். இதனுடாக எமது நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளின் சக்திகளால் ஏற்படவிருக்கும் பாதக நிலைக்கு எதிராக எமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும்.

    கொடிய யுத்தம் முடிவுக்கு வந்து பூரண சுதந்திரக்காற்றை அனுபவிக்க இனங்களுக்கிடையிலான ஒற்றுமை இன்று காலத்தின் தேவையாக உள்ளது. அதனை உணர்த்துகின்ற நாளாக இந்நாளை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.

    இன்று நாடு ஆசியாவிலேயே ஆச்சரியமிக்க நாடாக வருவதற்கான செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. என்றுமில்லாத அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு நடந்தேறி வரும் இச்சந்தரப்பத்தில் நாமும் இணைந்து தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற பாகுபாடின்றி கைகோர்த்து தாய்நாட்டுக்காக உழைப்போம். இச்சுதந்திர தின நாளில் நாட்டின் சுவீட்சத்திற்கும், இன ஒற்றுமைக்கும், சகவாழ்வுக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திப்போமாக எனவும் தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தியாகிகளால் பெறப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்போம்: ஹரீஸ் எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top