ஐ.நா. சபை கொழும்பு அலுவலகத்தின் முன்னுள்ள வாயில் கதவை உசுப்பினால், நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் என்று எண்ணும் பிரகிருதிகள் வாழ்கின்ற நாடு இது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வியாழக் கிழமை (13) மாலையில் இருந்து நள்ளிரவு வரை கம்பஹா மாவட்டத்தில் கல்லொளுவை கிராமத்தில் நடந்த போது ஒரு மக்கள் சந்திப்பில்; மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கம்பஹா மாவட்ட மக்கள் ஓரணியிலே ஒன்று திரண்டு சிந்திக்கும் கலநிலவரம் ஏற்பட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸை தூக்கி எறிய வேண்டும் என்கின்ற அளவிற்கு அரசாங்கத்திற்குள் இருந்து எத்தனிக்கிற தீவிரவாத சக்திகளும், அதனை அமைதியாக இருந்து உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றவர்களும் இருக்கத்தக்கதாக நாம் மிகவும் உணர்வு பூர்வமாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த உணர்வு பூர்வமான சிந்தனை இல்லாதது தான் எங்கள் மத்தியில் காணப்படும் ஒரு முக்கிய குறைபாடாகும்.
எந்தக் கட்டத்தில், எதைச் செய்கின்றோம் என்ற விவஸ்தை இல்லாமல் இருக்கின்றோம். அந்த விவஸ்தை இல்லாவிட்டால் எந்த கூச்சல், கூப்பாட்டத்திலும் அர்த்தமில்லை.
ஆங்கில ஏகாதிபத்தியம் இலங்கையில் காலூன்றி இருந்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் நாங்கள் சாதித்தவை ஏராளம், ஆனால் இன்று சாத்திகமான போராட்டம் ஒன்றைச் செய்ய துணியும் போது, அதனை முறியடிக்க சாப்பாட்டு பார்சலை கொடுத்து எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. பஸ் டிப்போக்களுக்கு காசு கூட செலுத்தாமல் பஸ்களில் ஆட்களைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள். அப்பாவி ஏழை எளிய மக்களைக் கொண்டு வந்து சாப்பாட்டுப் பார்சல் கொடுத்து கூப்பாடு போட வைக்கிறார்கள்.
எதற்கு எடுத்தாலும் ஆர்ப்பாட்டம் என்பது ஆட்சியாளர்களுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக மாறிவிட்டது. ஆட்களை அழைத்துக் கொண்டு போய் ஐ.நா. சபை கொழும்பு அலுவலகத்தின் முன்னுள்ள வாயில் கதவை உசுப்பினால், நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் என்று எண்ணும் பிரகிருதிகள் வாழ்கின்ற நாடு இது. அதற்கு முன் கலகம் அடக்கும் பொலீஸாரைக் கொண்டு வந்து நிறுத்தி கூடி இருப்பவர்களை கலைப்பதற்கு எத்தனிக்கும் நாடகமும் அரங்கேறுகின்றது. ஏன் இந்த கூத்து. இது சகிக்க முடியாத விஷயமாகும்.
நியாயாதிக்கம், இறைமை கோட்பாடு என்பனவற்றின் அடிப்படையில் வெளிநாடுகள் தலையிட முடியாத உள்ளது உண்மை. இவற்றையெல்லாம் சட்டநூல்களில் நாம் படித்தாலும் கூட அந்த கோட்பாடுகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன.
ஆட்சியை பாதுகாப்பது தான் நாட்டைப் பாதுகாப்பது என்ற பிரமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கதைக்க பயந்து கொண்டிருந்த காலம் ஒன்று இருந்ததது.
அரசாங்க ஊடகங்களைப் பொறுத்தவரை நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் எங்களை தாறுமாறாக கிழிப்பார்கள், அரசாங்கத்தோடு இணங்கிப் போகும் காலத்தில் தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவார்கள்.
எங்களது மக்கள் ஒருவிதமாக விரக்தியின் விளிம்பில் இருக்கின்றார்கள்.
கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து சரணாகதி அரசியல் செய்யபவர்கள் எங்கள் கட்சியிலும் இருக்கிறார்கள். புகழ்பாடுவதற்கு எல்லை இல்லை. 'நீங்கள் கதைகிறீர்கள். ஹசன் அலி சேர் அறிக்கை விடுகிறார். வேறு யார் சேர் பேசகிறார்கள்' என்று நான் பேருவளைக்குப் போனபோது சொன்னார்கள். சிலர் சாம்புராணி பிடிக்கிறார்கள் என்றார்கள்.




0 comments:
Post a Comment