நெருப்புடன் விளையாடாதீர்கள் என்று
துருக்கி ஜனாதிபதி தையிப் அர்துகான் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை
விடுத்துள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரஷ்ய
நாட்டில் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து இந்த புதிய சிக்கல்
முளைத்துள்ளது.
துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை
அழிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றை கடந்த சில
தினங்களுக்கு முன்பு சிரியா எல்லையில் சுட்டு வீழ்த்தியது.
அந்த விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் பாராசூட்டின் உதவியுடன் கீழே
குதித்தனர், இதில் ஒரு விமானி காயங்களுடன் வனப்பகுதியில் இருந்து
மீட்கப்பட்டார். கீழே விழுந்த மற்றொரு விமானியை அமெரிக்கா- துருக்கி ஆதரவு
கிளர்ச்சியாளர்களான ப்ரீ சிரியா ஆர்மி இயக்கம் சுட்டுக்கொலை செய்தது.
சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய
விமானத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் ஒலிப் பதிவை துருக்கி ராணுவம்
நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதனிடையே, ரஷ்யாவிற்கு சென்ற துருக்கி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்
ஒருவர் ரஷ்யாவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். விசா நடைமுறையில்
கட்டுபாடுகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கள் நாட்டு குடிமகன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை
கண்டித்து, நெருப்புடன் விளையாடாதீர்கள் என்று ரஷ்யாவிற்கு துருக்கி அதிபர்
தையிப் அர்துகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாரிசில் அடுத்த வாரம் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடினை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். அங்கரா
விமான தாக்குதல் சம்பவம் நடைபெற்றது முதல் புடின் அர்துகானுடன் பேசுவதை
தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment