ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், செயலாளர் நாயகம் ஹசன்
அலிக்கும் இடையில் புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடு ஏற்பட்டு உள்ளதாக
தாருஸலாமில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மு. காவின் அதியுயர் உச்சபீட கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்ற பிற்பாடு இம்முன்னேற்றம் நேர்ந்து உள்ளது.
இக்கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசன் அலி கலந்து கொண்டபோதிலும் தலைவர் ஹக்கீமின் பார்வையில் மிக அமைதியாக நடந்து கொண்டார்.
மு. காவின் தேசிய பட்டியல் எம். பியாக
ஹசன் அலியை நியமிப்பதற்கு தயாராகவே உள்ளார் என்று ஹக்கீம் எப்போதும்
தெரிவித்து வந்த நிலையில் செயலாளர் நாயகம் பதவியின் பிடுங்கப்பட்ட
அதிகாரங்கள் மீண்டும் தரப்படுகின்ற பட்சத்தில் மாத்திரமே எம். பி பதவியை
ஏற்று கொள்வார் என்பதில் ஹசன் அலி உறுதியாக இருந்து வந்து உள்ளார்.
ஆனால் அலியின் செயற்பாடுகளை சில காலம்
அவதானித்த பிற்பாடுதான் அதிகாரங்களை வழங்க முடியும் என்று ஹக்கீம்
பதிலுக்கு கூறி வர செயலாளர் நாயகம் பதவியின் அதிகாரங்களை வைத்து தலைவருக்கு
எதிராக என்ன தவறு செய்தார்? என்று ஹசன் அலி வினவி வந்துள்ளார்.
கூட்டத்தில் தவிசாளர் பஷீர் சேகு தாவுத்
வெகுண்டெழுந்து சர்ச்சைகளை கிளப்பினார். ஆனால் செயலாளர் நாயகம் ஹசன் அலி
ஒரு பார்வையாளர் போலவே காணப்பட்டார். பஷீருக்கும் அலிக்கும் இடையில்
இடைவெளி அல்லது விரிசல் ஒன்று இருப்பதாகவே வெளியில் தெரிந்தது.
ஹசன் அலி கூட்டத்தில் நடந்து கொண்ட
விதத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தவிர்ந்த தலைவரின் விசுவாசிகள்
பலரும் ஹக்கீமிடம் சிலாகித்து பேசி உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடத்திய கிராஅத் போட்டியில்
கலந்து கொண்டு குர் ஆன் ஓதிய போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட
சான்றிதழ்களில் செயலாளர் நாயகம் ஹசன் அலியின் கையொப்பம் காணப்படுவது
ஹக்கீமுக்கும் ஹசன் அலிக்கும் இடையில் மீண்டும் ஒற்றுமை ஏற்பட்டு இருப்பதை
நிரூபிக்கின்றது.

0 comments:
Post a Comment