• Latest News

    May 15, 2018

    காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்?

    கொழும்பு மாவட்ட மாணவ சமூகம் தலைநகரில் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஏனைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொழும்பு மாவட்ட மாணவர்களின் காலடியில் அமைந்திருக்கின்றன. ஆனால், ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்றபோது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே இவற்றிலிருந்து பயனடைகின்றனர். எனவே, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இவற்றை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டியது அவர்களது கடமையாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் LICO Club உம் இணைந்து ஏற்பாடு செய்த 60ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு ஹைரிய்யா பெண்கள் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (2018.05.12)  நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

    கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் வாசிப்புப் பழக்கத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டும். பொதுவாக இன்று இளம் சமூகத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கும் குன்றிவரும் நிலையில் கொழும்பு மாவட்ட மாணவர்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் - என்றார்.

    போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில் “21ஆவது நூற்றாண்டில் ஊடகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச் செயலமர்வில் கொழும்பு மாவட்டத்தின் எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 90 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.

    இந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், போரத்தின் பொருளாளரும் அல்ஹஸனாத் மாத இதழின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடகப் பணிப்பாளருமான ஹில்மி முஹம்மத், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ. இப்திகார், உதயம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஸமீஹா ஸபீர், ஊடகவியலாளர் ஷாமிலா ஷெரீப், ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

    லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், போரத்தின் தேசிய அமைப்பாளர் எம்.இஸட்.அஹமத் முனவ்வர், போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் றிபாஸ் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை வகித்தனர்.

    LICO Club இன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் ஊடக செயலமர்வில் பங்குபற்றிய மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாலை 4.30 மணியளவில் ஹைரிய்யா கல்லூரியின் ஸம் றிபாய் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் இணைத் தலைவர் பஸால் இஸ்ஸடீன்,LICO Club இன் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.இஸட்.எம். நவ்ஸர், பாடசாலை அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். இதில் முஸ்லிம் மீடியா போரம் சார்பாக போரத்தின் பொருளாளரும் அல்ஹஸனாத் மாத இதழின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் சிறப்புரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top