• Latest News

    February 04, 2026

    நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்! சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரிஷாத் பதியுதீன் எம்.பி


    இலங்கை தாய்நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களும் அமைதியாகவும் சுபீட்சமாகவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் நிம்மதியுடன் வாழ எமது தாய்நாட்டில் முடியுமென்றால் அதுதான் உண்மையான சுதந்திரம் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


    இந்த நாட்டில் வாழ்ந்து மறைந்த சிங்கள  முஸ்லிம் தமிழ்  தலைவர்கள் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அவர்கள் எமது தாய்நாட்டுக்கு வழங்கிய பங்களிப்புகளை  ஒருமுறை திரும்பிப்பார்ப்பது காலத்தின் தேவையாகுமென நான் நினைக்கிறேன்.

    நாடு சுதந்திரம்பெற்று இன்றுடன் 78வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கையில் வாழ்ந்த ஆரம்ப கால முஸ்லிம்கள் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் பல்வேறு துறைகளில் பல்வேறு தளங்களில் நின்று இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமாக உழைத்துள்ளார்கள் என்பதை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை படித்தால் அறிந்துகொள்ள முடியும்.

    இந்தவகையில்  முஸ்லிம்கள் இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகத்தைப் பேணுவதிலும் அதனூடாக உள்நாட்டின் விவசாயம் முதலான பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் சிங்கள மன்னர்களின் காலத்திலும் பின்னரும் உள்நாட்டு அரசியலிலும் காத்திரமான பல்வேறு பணிகளை ஆற்றி வந்துள்ளனர் என்ற உண்மையை எவராலும் இலகுவில் மறக்க முடியாது. அந்த வகையில் இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனங்களும் நாட்டுப்பற்றுடனும் மன நிம்மதியாகவும் வாழும் சூழல் எப்போது நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்றதோ, கிடைக்கின்றதோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு கிடைத்ததாக அர்த்தம் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்! சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரிஷாத் பதியுதீன் எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top