கசினோ, விபசாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனை என்பன நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தகங்களாக இருக்கின்றன எனவும், இலங்கையில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே அவற்றை தடுத்து நிறுத்த முடியும் எனவும் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கையில் கசினோ, விபசாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன பெருகியுள்ளன. இவற்றை 100 வீதம் தடுத்து நிறுத்த மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஷரியா சட்டமே சரியானது. இல்லாவிட்டால் அவற்றை முற்றாக தடுத்து நிறுத்த முடியாது.
கசினோ வர்த்தகத்தை இலங்கையில் ஊக்குவிக்க அரசு விசேடமாக எதனையும் செய்யவில்லை. அங்கங்கே இருக்கும் கசினோ வர்த்தகத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையே அரசு எடுத்துள்ளது.எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே இலங்கைக்கு கசினோ சூதாட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களைத் தவிர அரசு புதிதாக எந்த அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவில்லை என்றார்.

0 comments:
Post a Comment