• Latest News

    November 01, 2013

    கல்முனை மேயர் சிராஸ் மு.காவில் இருந்து இடைநிறுத்தம்; ஹக்கிம் அதிரடி நடவடிக்கை

    இப்னு செய்யத்;
    முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிவுவினை இடைநிறுத்தி வைத்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் சற்று முன்னர் அறிவித்துள்ளார். மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு அவருக்கு ஒரு வாரகாலம் அவகாசம் வழங்கி இருந்த நிலையில், சிராஸ் மீராசாஹிவு கட்சிக்கும், தலைமைக்கும் சவால்விடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தமையால் அவர் கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
    அத்தோடு, இதற்குப் பிறகு அவர் முஸ்லிம் காங்கிரஸின் மேயராக இருப்பதற்கான தகுதியையும் இழந்துள்ளார் என்றும் முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள இவருடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் அவருடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, அவரோடு இணைந்து கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக செயற்படுவார்களாயின் சிராஸ் மீராசாஹிவுவை கட்சியில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்னதாக அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
    ரவூப் ஹக்கிம் மேலும் தெரிவிக்கையில்;
    கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,   கட்சியின் தார்மிக பொறுப்பை மீறி அநாகரிகமான முறையில் அவர் செயற்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக கட்சிக்குள்ளும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார்.என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .
    சிராஸ் மீராசாஹீப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை மீறியுள்ளார். இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது
    இதனையும் மீறி அவர் கல்முனை மேயராக செயற்படுவாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் அத்துடன் இவர் கட்சியின் தலைமைக்கு வழங்கிய உறுதிமொழியை மீறும் வகையில் கடந்த ஒரு வார காலமாக தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
    இதனை ஒருபோதும் கட்சி அனுமதிக்காது. எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக எந்தவொரு அரசியல் அந்தஸ்தும் சிராஸிற்கு வழங்கப்படமாட்டாது”  எனவும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மேயர் சிராஸ் மு.காவில் இருந்து இடைநிறுத்தம்; ஹக்கிம் அதிரடி நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top