• Latest News

    April 02, 2014

    நாடற்ற குழுக்களின் செயற்பாடுகளால் சர்வதேச சமூகத் திற்கு பாரிய அச்சுறுத்தல்: பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய

    நாடற்ற குழுக்களின் செயற்பாடுகளால் சர்வதேச சமூகத் திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதெனவும் நாடற்ற குழுக்கள் உலக அரசியலுக்குள் பிரவேசித்துள்ளமை யினால் தேசிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சவால்களும் காணப்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

    நாடற்ற குழுக்கள் இரசாயன, கதிரியக்க, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதானது சர்வதேச பாதுகாப்பு மற்றும் சர்வதேச சமூகத்தினருக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகிறது. இதிலிருந்து பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகமும், அமெரிக்க பசுபிக் கட்டளை தலைமையகத்தின் நாடுகளுக்கு இடையிலான திட்டங்களை விரிவாக்கல் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் - 24" என்ற தொனிப் பொருளிலான செயலமர்வு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

    இலங்கை, அமெரிக்கா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த உயர்மட்ட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும் உரையாற்றுகையில்,

    நாடற்ற குழுக்களின் வருகை, செயற்பாடுகள் காரணமாக இன்று உலகம் எப்போதும் இல்லாத வகையில் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. கடந்த தசாப்தங்களாக உலகின் பாதுகாப்பில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. பயங்கரவாதிகள் இரசாயன, கதிர் இயக்க, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்புக்கள் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. முன்னைய காலங்களை விட தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காணப்படுவதால் இதனை அவர்கள் இலகுவாக பயன்படுத்தும் நிலைமை காணப்படுகிறது.

    இவ்வாறு இதனை பாரிய அளவில் பயன்படுத்தும் பட்சத்தில் அது சர்வதேச சமூகத்தினருக்கு சுகாதார, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது எனவும் இதனை சகலரும் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல நாடுகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த செயலமர்வு ஒன்றுபட்ட செயற்பாடுகளை மேம்படுத்த உதவியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாடற்ற குழுக்களின் செயற்பாடுகளால் சர்வதேச சமூகத் திற்கு பாரிய அச்சுறுத்தல்: பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top