• Latest News

    May 13, 2014

    தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு : ஹக்கிம்

    தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அங்கு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், அது தொடர்பில் தாம் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.

    அத்துடன், அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் பின்னணியையும், சூத்திரதாரிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக முழுமையான விசாரணை நடாத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் பணிப்புரை விடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சர் ஹக்கீமிடம் கூறியுள்ளார்.

    அமைச்சர் ஹக்கீம், திங்கள் கிழமை (12) முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
    இச் சந்திப்பின் பொழுது நிலைமையை விரிவாக எடுத்துக்கூறிய அமைச்சர் ஹக்கீம், இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அதிருப்தி நிலவுவதையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார். 

    தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கும், முஸ்லிம் அமைச்சர்களுடன் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, அளுத்கமை சம்பவத்திற்கு வழிகோலியதாக கூறப்படும் காரணிகள் புனைந்துரைக்கப்பட்டதாகவே தமக்கும் புலப்படுவதாகவும், எவ்வாறாயினும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை நிலைமையைக் கண்டறிந்து அந்த விடயத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.

    அளுத்கமை வர்த்தக நிலைய எரியூட்டல் சம்பவத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும் பாரதூரமானதென்றும் அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸாரும், பாதுகாப்பை பலப்படுத்த படையினரும் தவறி விட்டனர் என்றும் அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.  

    டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
    ஊடக ஆலோசகர்




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு : ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top