• Latest News

    January 19, 2018

    Nazeer Vs Nazeer யாரை யார் வெல்லுவாரோ?

    - -ஏ.எச்.சித்தீக் காரியப்பர் -
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான தேசியப்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் இடத்துக்குப் புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், யாரைத் தெரிவு செய்வது என்பது குறித்து இரு ஊர்களைச் சேர்ந்த இருவர் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
    தேர்தல் காலம் என்பதால் பெரும்பாலும் அட்டாளைச்சேனைக்கே அது வழங்கப்படும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் அட்டாளைச்சேனைக்குத்தான் எம்.பி என்றால் யாரை நியமிப்பது என்ற விடயம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
    கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மறு தரப்பில் இல்லை.. இல்லை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரையே நியமிக்க வேண்டும் என்றும் இரு தரப்பு
    அபிப்பிராயங்கள்.
    இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுக்கும் தேசியப்பட்டியல் எம்.பி வழங்குவது தொடர்பில் கரிசனை காட்ட வேண்டிய கட்டாய நிலையில், சல்மானின் வெற்றிடத்துக்கு அவரை நியமிப்பது குறித்தும் ஆராயப்படுவதாகத் தெரிய வருகிறது.
    இங்குதான் இரண்டு பிரச்சினைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எதிர்கொள்ள நேரிடுகிறது.
    1.அட்டாளைச்சேனையில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சமாளித்து, ஏறாவூர் ஹாபிஸ் நஸீர் அஹமதுக்கு எம்.பி பதவி கொடுத்தால் அட்டாளைச்சேனை மக்கள் குழம்பி விடுவார்கள்.
    2. ஏறாவூரில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களைச் சமாளித்து அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுத்தால் ஹாபிஸ் நஸீர் குழம்பி விடுவார். இந்த விவகாரத்தில் ஹாபிஸ் நஸீர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் அது கட்சிக்குப் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி தொடரான பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் .
    எனவே, இந்த இரு விடயங்களிலும் இருதலைக்கொள்ளி எறும்பு நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள கட்சியின் தலைவரான அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் சாணக்கியத்துடன் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளளார்.
    எது எப்படியிருப்பினும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கும் தேசியப்பட்டியல் எம்.பி கொடுத்தே ஆக வேண்டும் என்ற விடயத்தில் மத்திய அரசின் இரு கோண அழுத்தங்கள் உள்ளன. “நீங்கள் உங்கள் கட்சி ஊடாக எம்.பியாக வாருங்கள். நாங்கள் உங்களை அமைச்சராக்கி விடுகிறோம்” என ஹாபிஸ் நஸீரிடம் உறுதி வழங்கப்பட்டமை தொடர்பில் நான் முன்னரும் எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன்.
    ஹாபிஸ் நஸீரை குறுகிய காலத்துக்கு பொறுமை காக்கச் செய்து சல்மானின் இடத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரை எம்பியாக நியமித்தாலும் ஹாபிஸ் நஸீருக்காக திருமலை மாவட்ட தேசியப்பட்டியல் எம்.பி தௌபீக் தனது பதவியை விரைவில் இராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
    தீச் சுவாலையிலிருந்து தப்பி விடலாம் ஆனால், வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்புகளிலிருந்து தப்புவது கடினதுமானது. அந்த எரிமலைக் குழம்புதான் இந்த ஹாபிஸ் நஸீர். அவரை அணைத்த விட முடியாது. ஆனால், அவரை அணைத்துக் கொள்வதற்கு மத்திய அரசு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை.
    பொறுத்திருந்து பார்ப்போம். நல்லவைகள் நடக்கட்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: Nazeer Vs Nazeer யாரை யார் வெல்லுவாரோ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top