யு.எல்.எம். றியாஸ் -
சஹ்ரானின் மனைவயை பார்ப்பதற்கு நான் செல்லவில்லை என்பதனை திட்டவட்டமாகத் தொிவித்துக் கொள்கின்றேன். நேற்று முன்தினம் (01.05.2019) சம்மாந்துறை பிரதேசத்தில் படையிரானால் மேற்கொள்ளப்படட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்படட ஆயுதம் உள்ளிடட வெடிபொருட்கள் தொடர்பில் சம்பந்தப்படடவர் என்ற சந்தேகத்தின் பேரில் எனது சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வெடி பொருட்களுக்கும் எனது சாரதிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நேற்று (02.05.2019) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலார் சந்திப்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது
கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பிலும், பிற இடங்களிலும் நடந்தேறிய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவமாகும்.
கிறிஸ்தவர்களுடைய புனித ஆலயத்திலே அவர்களுடைய புனித தினத்திலே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் நடந்தேறிய சூழலில் அது முஸ்லிம் தரப்பை சேர்ந்த பயங்கரவாதிகளாலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற செய்தி மிகவும் பேரதிர்ச்சியை முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம் தலைமைகளைகளையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருக்கின்ற சூத்திரதாரிகளை நிச்சயமாக கண்டுபிடித்து உடனடியாக இதனை இல்லாமல் செய்ய வேண்டும். இதில் முஸ்லிம் சமுதாயம் உறுதியாக இருக்கின்றது. இதே நிலைப்பாட்டில்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உள்ளார்கள்.
கடந்த 30 வருடங்களாக் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், ஏனைய பகுதிகளிலும் நடைபெற்ற யுத்த வடுக்களும், வேதனைகளும், அதனால் பட்ட கஷடங்களையும் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கின்ற போது மீண்டும் எந்தக் காரணத்திற்காகவும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் வந்துவிடக் கூடாது.
என்னை பொறுத்தவை இந்த பயங்கரவாதிகளின் முடிவு ஆரம்பத்திலே உறுதியாகிவிட்டது போலவே தென்படுகிறது.
அந்தளவிற்கு அவர்கள் குறித்த சொற்ப அளவினர் அதாவது தங்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே இவ்வாறான சம்பவங்களை மேற்கொண்டுள்ளார்கள். மேலும் அதனோடு சம்மந்தப்படடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அம்பாறை மாவடடத்தில் உள்ள சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை என கரையோரப் பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ், இராணுவத்தினருக்கு உங்களால் இயன்றளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது நாட்டினுடைய சமாதானத்தை இஸ்திரப்படுத்துவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கத்தை நிவர்த்தி செய்வதற்கும் மிகவும் அத்தியாவசியமாகும்.
நாங்கள் அவசரமாக இந்த நாட்டில் சமாதானத்தை, அமைதியை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் நாம் மிகுந்த ஒத்துழைப்பினை படையினருக்கு வழங்கி வருகின்றோம்.
இதேவேளை, பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையின் போது மக்களுக்கு எந்த குந்தகமும் இல்லாமல் அவர்களை நோவடிக்காமல் மிகவும் சிறந்த முறையில் தமது சோதனை நடவடிக்கைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பொறுத்த வரை அப்பிரதேச மக்களே முன்வந்து குண்டுதாரிகளை கட்டிக்கொடுத்தார்கள்.
இந்த சூழலில் சில ஊடகங்கள் அல்லது சில சக்திகள் முழு முஸ்லிம் சமுதாயத்தையும் ஒரு பயங்கரமான சமுதாயமாக சித்தரிக்க முற்பட்டு அதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது. அது போதாதென்று முஸ்லிம் தலைமைகளைகளையும் கலங்கப்படுத்தி, அவர்களையும் ஓரங்கட்டுகின்ற அல்லது அவர்களையும் இந்த பயங்கரவாதத்தில் தொடர்புபடுத்தி விமர்சிக்கின்றமையையும் சில ஊடகங்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. இது மிகவும் கண்டனத்திற்குரிய விடயமாகும்.
அவ்வாறே மிக அண்மைக் காலமாக ஊடகங்கள் மிக மோசமாக என்னையும் விமர்சிக்கின்றன.
கடந்த 29ம் திகதி சாய்ந்தமருதை சேர்ந்த எனது நண்பர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்கள் தற்போது அரசியல் அதிகாரம் இல்லாத சூழலில் அவரது ஊரை சேர்ந்த சாய்ந்தமருது சம்பவத்தில் மரணித்த அப்பாவி பெண்ணும் , அதேநேரம் காயப்பட்டவர்களின் நிலைமை தொடர்பாக பார்க்க வேண்டி அம்பாறைக்கு செல்லவேண்டி இருந்தது. அவர் கூறியதற்கு இணங்க நானும் அம்பாறை வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். நாங்கள் சென்ற வேளை சாதாரணமாக நோயாளிகளை பார்வை இட முடியாத நேரமாகும். அப்போது நேரம் 11.30 என நினைக்கிறன்.
நோயாளியை பார்வை இட பாஸ் தேவை என்பதனால நாங்கள் குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகரை சந்தித்து விடயத்தை கூறிய போது அரை மணிநேரம் தாமதித்து வருமாறும், பாஸ் நடைமுறை இருப்பதனால் உடனடியாக உங்களை அனுமதிப்பதில் நடைமுறை சிக்கல் இருக்கின்றது. குறித்த நோயாளர் விடுதியில் உள்ள கடமை நேர உத்தியோகத்தரோடு பேசிவிட்டு உங்களுக்கு அனுமதி தருகிறேன் என்று சொன்னதற்கிணங்க அரை மணி நேரத்தை கழிக்க கீழே வருகின்ற போது எங்களுடன் வருகை தந்திருந்த சாய்ந்தமருதை சேர்ந்த சகோதரர்களை அவர்களது அடையாள அட்டையை பரிசோதித்து சந்தேகத்திற்கு இடமாக நடத்துகின்ற விடயம் தெரியவந்தது. அவ்விடம் நான் சென்று அவர்கள் என்னுடன் வந்தவர்கள் என்ற விளக்கங்களை சொன்னேன். அவர்கள் என்னையும் என்னையும் சேர்த்து சந்தேகமாக பார்க்கப்படுகின்ற நிலைமை அங்கு காணப்பட்டது. ஆகவே, அந்த சூழ்நிலை சரியாய் இல்லாததினால் மரணித்த அந்த சகோதரியின் உடலை தாமதித்து பெறுவோம் என்று கூறி திரும்பி வந்துவிட்டோம்.
ஆனால் குறித்த சம்பவத்தை ஒரு மௌபிம எனும் பத்திரிகை முதல் பக்க செய்தியாக, பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரானின் மனைவி, பிள்ளை ஆகியோர்களை பார்வையிட அம்பாறை வைத்தியசாலைக்கு வந்ததாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்தி வந்தது. இது உண்மையிலேயே பாரதூரமான ஒரு வேதனை அளிக்கும் விடயமாகும். இது உண்மையிலேயே ஒரு அறிவு பூர்வமான செய்தியாக இருக்க முடியாது. இதனை நான் ஆட்சேப்பிக்கின்றேன். சஹ்ரானின் மனைவயை பார்ப்பதற்கு நான் செல்லவில்லை என்பதனை திட்டவட்டமாகத் தொிவித்துக் கொள்கின்றேன்.
ஒட்டுமொத்தமாக இந்த பயங்கரவாத சம்பவத்தில் சம்பந்தப்படடவர்களை இல்லாமல் செய்கின்ற விடயத்தில் மிக கடினமான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. குறித்த பத்திரிகைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளேன். அவர்கள் இதனை நிவர்த்தி செய்து உண்மையான செய்தியை மீண்டும் பிரசுரம் செய்ய வேண்டும் என்று நான் வேண்டி இருக்கிறேன். இல்லாவிட்டாள் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருகிறேன்.
இது ஒரு புறமிருக்க நேற்று சம்மாந்துறையில் இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைத்துப்பாக்கிகள், ரவைகள் ஒரு பாழ்வளவில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அறிய முடிந்தது. கல் உடைப்பதற்காக அரச அனுமதிப்பத்திரத்தோடு அரசாங்கத்தினால் வழங்கப்படட வெடி பொருட்களையும் கைப்பற்றியுள்ளார்கள். அதுவும் இந்த பாழ்வளவில் இருந்த ஆயுதங்களுடன் ஒன்றாக வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பொருட்கள் அனைத்துமே என்னுடைய சாரதியின் வீட்டிலே இருந்து கைப்பற்றியதாகவும், என்னுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு அரச ஊடகம் ஒன்றிலே செய்தியாக உண்மைக்குப் புறம்பான தெரிவிக்கப்பட்டது.
உண்மையான செய்தி என்னவென்றால் குறித்த வெடிபொருட்கள் வேறொருவர் அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக் கொண்டு தனது வீட்டிலே சட்டப்படி வைத்துக் கொண்டிருந்ததாகும். வெடி பொருட்கள், மற்றயது பாழடைந்த வளவில் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. அதை தோண்டி இராணுவத்தினரும், பொலிஸாரும் எடுத்துள்ளனர். குறித்த பாழ்வளவிற்கு முன்னால் என்னுடைய சாரதியின் தாயின் வீடு இருக்கின்றது. இது அவர் குடியிருக்கும் வீடும் அல்ல. ஆனால், அவர் கடந்த நான்கைந்து நாட்களாக தன்னுடைய தகப்பனுக்கு சுகமில்லாததன் காரணத்தினால் தன்னுடைய மனைவியோடு தாயின் வீட்டிலேயே தங்கி வருவதாக அறியக் கிடைக்கின்றது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது அப்பிரதேசத்தில் உள்ள பலரும் கேள்விக்குட்படுத்தி, இவரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைது செய்யப்பட்டுள்ளார். அந்த செய்தியும் திரிவுபடுத்தப்பட்டு வெளி வந்திருக்கிறது.

0 comments:
Post a Comment